தோல்வியை அனுபவிக்கத் தயார்! – ‘மொட்டு’க் கட்சி தெரிவிப்பு.

“தேர்தலை ஒத்திப்போடும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. வெற்றியை அனுபவித்தது போல் தோல்வியை அனுபவிப்பதற்கு நாங்கள் தயார்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“பிழை பிழைதான். பிழை நிகழ்ந்தால் அதை சரி என்று சொல்லமாட்டேன். தேர்தலை நடத்த வேண்டும் என்று சொல்பவர்களுக்குச் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நிறுத்துமாறு கூறுவதற்கு உரிமை இல்லை.

இந்தக் கொண்டாதுக்கு 20 கோடி ரூபாதான் செலவு. ஆனால்,தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா. இதில் எது அதிக தொகை என்று பார்க்க வேண்டும்.

அந்த ஆயிரம் கோடி செலவு செய்வது பரவாயில்லை. 20 கோடி செலவு செய்வதுதான் இவர்களுக்கு வீண்விரயமாகத் தெரிகின்றது.

போர் வெற்றியைக் கொண்டாடுவதுபோல் சுதந்திர தினமும் கொண்டாடப்பட வேண்டும். எமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

இப்போது பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றது. எரிபொரு வரிசை, பால்மா வரிசை எல்லாம் இப்போது இல்லை.

சுற்றுலா துறை முன்னேறி வருகின்றது. சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது. தேர்தலை ஒத்திப்போடும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தோல்வியை அனுபவிப்பதற்கு நாங்கள் தயார். வெற்றியை அனுபவித்தது போல் தோல்வியை அனுபவிப்பதற்குத் தயார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.