‘உயர்நீதிமன்றத்தை பராமரிக்கவில்லை’ – நீதிபதிகள் கண்டனம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர்கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த 2021 ஆண்டு நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அர்தநாரீஸ்வரர் கோவில் 1500 ஆண்டுகள் கோவில் மிகவும் பழமையானது என்பதனால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுவரை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்த கோவில்கள், புராதன சின்னங்கள், கட்டிடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், சிதிலடமைந்துள்ளதாக அதிருப்திதெரிவித்தனர்.

மேலும் பத்து ஆண்டுகள் ஆகியும் சென்னை கன்னிமாரா நூலக சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட வில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறையில் எத்தனை பணியாளர்கள் உள்ளார்கள்? பணிகளை முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவை? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 30 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.