அரசியலுக்காகத் தமிழ் அரசியல் கைதிகளைத் பாவிக்காதீர்! – விஜயதாஸவுக்கு அருட்தந்தை பதிலடி.

அரசியலுக்காகத் தமிழ் அரசியல் கைதிகளையும், தமிழர்களையும் பாவிக்க வேண்டாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளே தடையாக இருக்கின்றனர்’ எனக் குறித்த நேரத்தில் வெடிக்கும் அரசியல் குண்டை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வீசி இருக்கின்றார். அது செயல் இழந்த குண்டு. அவரது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். உங்கள் அரசியலுக்காகத் தமிழ் அரசியல் கைதிகளையும், தமிழர்களையும் பாவிக்க வேண்டாம் என மீண்டும் கூறுவதோடு குறித்த உள்நோக்கம் கொண்ட அரசியலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழர்களும் அரசியல் கைதிகளும் பல்வேறு போராட்டங்களை கடந்த காலத்தில் நடத்திய போது, ‘நாட்டில் அரசியல் கைதிகளே இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர். அவர்களை நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் விடுதலை செய்ய முடியாது’ எனச் சிங்களப் பேரினவாத அரசியலை முன்னகர்தியவரே தற்போது தமிழ் அரசியல்வாதிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்பட்டம் அடித்தார். ஆனால், அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தையே அமுல்படுத்த முடியாது எனப் பேரினவாதிகளின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இவர்கள் எத்தகைய அரசியல் தீர்வையும் தரப்போவதில்லை என ஆட்சியாளர்கள் மீதும் சிங்களப் பேரினவாதிகள் மீதும் தமிழ் தமிழர்கள் வெறுப்பும் கோபம் கொண்டிருக்கின்ற சூழலில் நீதி அமைச்சர் சிறுபிள்ளைத்தனமாகத் தமிழர்களின் கோபத்தைத் திசை திருப்ப நினைப்பது நகைச்சுவையே.

அரசியல் கைதிகள் அனைவரையும் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி பொதுமன்னிப்பின் கீழ் சில்லறைகளாக அரசியல் கைதிகளை விடுப்பது தமிழர்களையும், அரசியல் கைதிகளையும் அவமானப்படுத்தும் செயலாகும். இதனையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உங்கள் சுதந்திர தினத்தில் மூன்று அரசியல் கைதிகள் வெளியில் வர உள்ளனர் என்று அறிகின்றோம். அவர்களோடும் குடும்பத்தாரோடும் நாமும் மகிழ்ச்சியடைகின்றோம். ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் அரசியல் தீர்மானம் மூலம் விடுதலை செய்வது என்பது எமக்கான அரசியல் கௌரவம்; அரசியல் கைதிகளுக்கான கௌரவம் என்பதை நீதி அமைச்சரும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.

நீதி அமைச்சர் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் விரும்பாத அரசியல் தீர்வைக் கூட நடைமுறைப்படுத்த முடியாமைக்குக் காரணம் பேரினவாத சிந்தனையைத் தவிர சட்டப் பிரச்சினை அல்ல. ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உங்கள் சட்டம் காரணமாக உள்ளது. நீண்ட காலம் சிறை வாழ்வை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனச் சிங்கள அரசியல்வாதிகளே பகிரங்கமாகக் கூறும் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துங்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். அதனை விடுத்து உங்கள் அரசியலுக்காக எம்மைப் பயன்படுத்தி அரசியல் குளிர் காய நினைப்பது ஈனத்தனமான அரசியலாகும் – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.