புதிய சுதந்திரப் போராட்டம் குட்டித் தேர்தலின் பின்னர் வெடிக்கும்! – சஜித் சூளுரை.

“நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய சுதந்திரப் போராட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்படும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

காலி மாவட்டத்தின் ஹினிதும தொகுதியில் நேற்று (04) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று 75 ஆவது சுதந்திரம் கொண்டாடப்படுகின்ற போதிலும், வங்குரோத்து மற்றும் வீழ்ச்சியடைந்த நாட்டிலேயே இன்றைய சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் தாங்க முடியாத பொருளாதார அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பட்டினியால் வாடும் மக்கள், எதிர்பார்ப்புகளை இழந்த இளைய தலைமுறை,கல்வியை இழந்த பிள்ளைகள் பெரும் பேரழிவுக்கு மத்தியில் உள்ளனர். இந்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய சுதந்திரப் போராட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்படும்.

திருடப்பட்ட பணத்தை மீட்பதற்காக உருவாக்கப்படவுள்ள முகாமைத்துவ அதிகார சபையை வலுப்படுத்தி, இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துப் பணத்தையும் மீட்பதற்குப் பாடுபடுவேன். பண மோசடி சட்டத்தை நவீனமயப்படுத்தி பலப்படுத்துவேன். சர்வதேச நிதித்துறை சார்ந்த சிறந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு நிதி மோசடிக்காரர்களை இனங்காணும் நடவடிக்கையை முன்னெடுப்பேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.