போலி மதுபான ஆலை.. சிக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்..!

மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள வட மணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான வடிவேலு. இவரது மனைவி ஜெயந்தி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

வடிவேலு, கொங்கரை கிராமத்தில் ஒரத்தி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு அரிசி ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் அந்த அரிசி ஆலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரிசி ஆலைக்குள் போலி மதுபான தொழிற்சாலை மறைமுகமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் போலி மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானம் தயாரிக்க 212 கேன்களில் வைத்திருந்த எரி சாராயம், 11 ஆயிரம் பாட்டில் மூடிகள், 20 ஆயிரம் காலிபாட்டில்கள், மதுபாட்டில்களை சீல் வைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டது. போலி மதுபான ஆலையில் தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலும் கள்ளத்தனமாக கொடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வடிவேலு, அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். எரி சாராய வழக்கில் கைதான வடிவேலு மீது ஏற்கனவே நாட்டுவெடிகுண்டு தயாரிப்பு, ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தலின் போது தடுத்த போலீசார் மீது டிராக்டர் மோதி கொலை செய்ய முயன்றது, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் திமுகவில் ஒன்றிய தொண்டர் அணி செயலாளராக அச்சரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெளியே அரிசி ஆலைபோல் தோற்றமளித்தாலும், உள்ளே மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.