“மர்மமாக இருக்கிறது”.. ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறினார். ஓரிரு திட்டங்கள் பாக்கியிருப்பதாகவும், ஓராண்டுக்குள் அவை அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். நாட்டு மக்கள் தனக்கு கவசமாக இருப்பதாக பிரதமர் மோடி பேசியது குறித்த கேள்விக்கு மக்கள் யாரும் அப்படி சொல்லவில்லை என்று முதலமைச்சர் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயல் என்று முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் மக்கள் மனங்களில் இருந்து நீக்கிவிட முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

பாஜக ஆட்சி மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்ரச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை என்றும் விமர்சித்தார். பாஜக ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிரதமர் மோடி கூட்டணி பற்றி கேட்கலாமா என்று விமர்சித்த ஸ்டாலின், ஆக்கப்பூர்வமான அரசியலே என் பாணி. அவதூறு பரப்புவது எதிர்க்கட்சிகளின் பாணி. அரசியல் செய்ய வாய்ப்பளிக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகளுக்கு என் மீது கோபம் என்றும் கூறினார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மர்மமாக இருப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பது அக்கட்சிக்கு சாதகமாக அமையாது என்றும் முதலமைச்சர் பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.