தென்காசி காதல் விவகாரம்..நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா, கடந்த ஜனவரி 25ஆம் தேதி பெற்றோர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட காட்சி வெளியாகியிருந்தது. இந்நிலையில், காதல் திருமணம் செய்த மனைவி கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டதாகவும், மனைவியை மீட்டுத் தரக்கோரியும் தென்காசியை சேர்ந்த வினித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, குஜராத்தில் இருந்து வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரான கிருத்திகா காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நீதிமன்றத்தில் வைத்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.கிருத்திகா நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலம் சீலிட்ட கவரில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்பு சமர்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கிருத்திகாவிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தற்போதைய நிலையில் அவரை யாரிடமும் அனுப்ப இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கிருத்திகா தொடர்ந்து காப்பகத்திலேயே இருக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.