முஸ்லிம்களை அவமதித்தது ராஜபக்சக்களே! – சஜித் சுட்டிக்காட்டு.

“இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தவர்கள் ராஜபக்சக்களே. கொரோனா காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டார்கள்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புத்தளத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போராட்டத்தின் மூலம் கோரப்பட்ட எந்த மாற்றமும் இதுவரை எட்டப்படவில்லை. அகிம்சை ரீதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற வகையில் இது குறித்து நான் வருந்துகின்றேன்.

வன்முறையை விரும்பும் சில அரசியல் குழுக்கள் இந்த நாட்டைப் பொறுப்பேற்கின்றோம் எனக் கூறுவது நகைப்புக்குரியது.

இன்றும் இந்நாட்டை ஆள்வது ராஜபக்ச நிழல் அரசே என்பதால், ராஜபக்சக்களால் தூண்டப்பட்ட இனவாதத்தை அழித்து சகோதரத்துவம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். ராஜபக்சக்களின் இந்த நிழல் அரசை விரட்டியடிக்க வேண்டும்.

உலகின் பிற நாடுகள் நமக்குப் பின்னால் இருந்தாலும், இந்நாடுகள் இப்போது நம்மை விட முன்னேறியுள்ளன. நாமும் அந்த வழியில் பயணிக்க ஒரு புதிய தொடக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

புதிய தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் திட்டங்கள் மூலம் இளைஞர்களை வலுவூட்டி நாட்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.