கண்டம் விட்டு கண்டம் பாயும்: வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது.

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகளவில் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதற்கிடையே அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக அறிவித்தன.

இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. போர் பயிற்சியை தொடங்கினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் அமெரிக்கா, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.

அந்த ஏவுகணையை கடலை நோக்கி வடகொரியா ஏவியது. இதுதொடர்பாக தென் கொரியா ராணுவம் கூறும்போது, அதிகாலையில் ஏவப்பட்ட ஏவுகணை 66 நிமிடங்கள் வானில் பறந்து கடலில் விழுந்தது என்றும் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றது என்றும் தெரிவித்தது.

இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்துள்ளது. அந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக் கைடா மாகாணத்தின் மேற்கு ஓஷிமா தீவு அருகே விழுந்ததாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்தார்.

இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா கூறும்போது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது வலிமையான எதிர் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வடகொரியாவின் உண்மையான போர் திறனை காட்டுகிறது.

இந்த சோதனை, எதிரி படைகள் மீது அபாயகரமான அணு சக்தி எதிர்த்தாக்குதல் திறனுக்கு உண்மையான ஆதாரம் என்று தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.