13 இற்கு முவுகட்ட நாம் முழு ஆதரவு! – விமல், கம்மன்பில, வீரசேகர கூட்டாகத் தெரிவிப்பு.

“இலங்கைக்குச் சாபக்கேடான 13ஆவது திருத்தச் சட்டத்தை 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் குரல்கள் வலுத்துவரும் நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு இலங்கையை அடக்கி ஆள இந்தியா முனைகின்றது. அதேவேளை, வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக தனிநாடு கோருகின்றார்கள். காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னமும் பகிரப்படவில்லை என்று கூறி அதியுச்ச அதிகாரப் பகிர்வை அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

இலங்கை பௌத்த – சிங்கள நாடு. மகாசங்கத்தினர் 13 ஆவது திருத்தத்துக்கு அடியோடு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டம் எதற்கு? இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அதை முழுமையாக நீக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் 13 ஆவது திருத்தம் வேண்டாம் எனில் நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை இல்லாதொழிக்க வேண்டும். இதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.

ஆளும் கட்சியிலும், எதிரணி வரிசைகளில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை விரும்பவில்லை. எனவே, இலங்கைக்குச் சாபக்கேடான 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க கட்சி, பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.