இரண்டு நாள் பயணமாக இத்தாலி பிரதமர் 2-ம் தேதி இந்தியா வருகை.

இந்தியா, இத்தாலி இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75-வது ஆண்டை இரு நாடுகளும் இந்த ஆண்டு கொண்டாடுகின்றன. இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரண்டு நாள் பயணமாக வரும் 2-ம் தேதி இந்தியா வருகிறார்.

அவருடன் துணை பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான ஆன்டனியோ தாஜன் மற்றும் உயர்மட்ட வர்த்தக குழுவும் இந்தியா வருகிறது. டெல்லி வரும் மெலோனி அன்று பிற்பகலில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசுகிறார். வரும் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும் இந்தியாவின் ராய்சினா பேச்சுவார்த்தையில் தலைமை விருந்தினராகவும் மெலோனி பங்கேற்கிறார்.

புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த இந்தியாவின் முக்கிய பேச்சுவார்த்தை இதுவாகும். இதற்கிடையே டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் இத்தாலி பிரதமர், ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கிறார். மேலும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2020-ம் ஆண்டு காணொலி மூலம் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் விவாதிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.