உள்ளூராட்சி சபைத் தேர்தலால் எந்த மாற்றமும் ஏற்படாது! – ஹரின் தெரிவிப்பு.

உள்ளூராட்சி சபைத் தேர்தலால் இந்த நாட்டில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என்ற போதிலும் அது ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமா என்பது சந்தேகமே. அந்த நாளில் தேர்தல் நடக்காது என்பதே எனது உறுதியான கருத்து.

தேர்தலை விடவும் முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளன. அவை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படுகின்றது. தேர்தலை விடவும் மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார தேவைகளே அவசியம்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின்னரே அமைச்சரவை மாற்றம் இடம்பெறும். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.