அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் (15.03.2023) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டமானது நடப்பாண்டின் காலண்டுக்கான கூட்டமாக அமைந்தது. தற்போது அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டம் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதில் குறிப்பாக வீட்டுத்திட்டம், குடிநீர், வாழ்வாதாரம், உலருணவு, கல்விக்கான உதவி, சுயதொழில் ஊக்குவிப்பு, சமூக விழிப்புணர்வு, தொழில் வழிகாட்டல், கிராமிய அத்தியாவசிய உட்கட்டுமானத் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்படன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் இதற்கு ஏற்றால் போல் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் உதவித் திட்டங்களை வழங்க முன்வருதல் சிறந்ததாக அமையும் என மாவட்ட அரசாங்க அதிபர் ஆலோசனைக் கருத்துக்களை வழங்கினார்.

இக் கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி. வில்வராஜா, உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகர் திருமதி .ஜெயபவாணி, மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், முல்லை வலயக்கல்வி பணிப்பாளர், துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டப் பணிப்பாளர்கள் , அதிகாரிகள் , பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.