இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல! – சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளது என்றும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எனவே, இனிமேல் வழமையான கொடுக்கல் – வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்குக் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஆற்றிய விசேட உரையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை, அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசு படிப்படியாக நீக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இரு தலைவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனிமேல் இந்த உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அது தொடர்பான உடன்படிக்கை நாளை (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.