தைவானை வட்டமிட்ட 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள்… தாய்நாட்டை பாதுகாக்க போராடுவோம்.

தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைப்பேவுக்கு வரும் வழியில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்.

இந்த பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்த சந்திப்பு நடைபெற கூடாது என்று இருதரப்பையும் கடுமையாக எச்சரித்தது.

ஆனால் சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன்பு, தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்து பேசினார். இதனால், ஆத்திரமடைந்த சீனா, தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை தொடங்கியது.

தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என சீன ராணுவமும் தெரிவித்தது.

இந்த போர் பயிற்சியானது இன்றும் தொடர்ந்தது. இதன்படி, இன்று காலை 6 மணியளவில், தைவானை சுற்றி 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் வட்டமிட்டன. இதனால், தைவானை சுற்றி இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது என்பது தெளிவானது.

இவற்றில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவற்றில், ஜே-11, ஜே-10, ஜே-16, ஒய்-8 ஏ.எஸ்.டபிள்யூ., ஒய்-20, கே.ஜே.-500 உள்ளிட்ட விமானங்களும் அடங்கும். அவை தைவான் ஜலசந்தியின் மைய பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றது என தைவான் அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், தைவான் எங்களது தாய்வீடு. நாங்கள் எங்கே போனாலும், என்னவெல்லாம் எதிர்கொண்டாலும், அதெல்லாம் ஒரு விசயமே இல்லை. தைவான் எப்போதும் அழகாகவும், வசீகரிக்கும் வகையிலும் உள்ளது.

இந்த நிலத்தின் ஒவ்வொரு கதையும் எங்களது நினைவுகளில் பதிந்து உள்ளது. எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டை பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்து உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.