செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் “சித்ரா பௌர்ணமி “.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்ததுதான் ஆனால் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி மிகச்சிறப்பு வாய்ந்தது!

தமிழ் மாதத்தில் முதல் மாதம் சித்திரை!சூரியன் உச்சம் பெறும் மாதம் சித்திரை!!இநுத சித்தரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும்,பௌர்ணமியும் கூடிய திருநாளே சித்ரா பௌர்ணமி.

மற்ற எந்த மாதங்களில் வரும் பௌர்ணமியை விட சித்ரா பௌர்ணமி அன்று சந்திரன் எந்ந வித கலங்கமும் இல்லாமல் அவ்வளவு பிரகாசமாக இருப்பார்.

இறைவனாகி சிவபெருமானின் அறுபத்து மூன்று திருவிளையாடல்களின் முதல் திருவிளையாடலாகி “இந்திரனை பழிதீர்த்த படலம்”திருவிளையாடல் சித்ரா பௌர்ணமி அன்றுதான் நடந்தது.

சித்ரா பௌர்ணமின் மற்றொரு சிறப்பு அன்றுதான் சித்திரகுப்தர் பிறந்தார்.

மனிதரின் பாவபுண்ணிய கணக்குகளை எழுதக்கூடிய சித்திரகுப்தர் மகத்தான ஆற்றல் பெற்றவர்.இவர் தோன்றியதே ஒரு சுவராசியமான விசயம்!

ஓர் அழகான சித்ரா பௌர்ணமி அன்று உமையவள் பார்வதி ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள்.

அந்த ஓவியம் மிக அழகாக நிஜ குழந்தை போல அப்படியே இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா” என்று கூறிக் கொண்டே தன் கைகளால் எடுத்து, தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார்.

இந்த அற்புதத்தை கண்ட பார்வதி தேவி, மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு ‘சித்திர குப்தன்’ என்று பெயர் வைத்தாள்.

இதனிடையே யமதர்ம ராஜாவுக்கு மிகப்பெரிய மனக்கவலை ஒன்று வாட்டியது!அதாவது மனிதர்களின் பாவ,புண்ணியங்களுக்கு ஏற்ப மனிதர்களை மேல் உலகத்திற்கு அழைத்து வருமாறு சிவபெருமானும்,பிரம்மனும் கட்டளை இட்டு இருந்தனர்.

ஆனால் ஒருவரின் பாவ புண்ணிய கணக்கை யமதர்ம ராஜவால் துல்லியமாக கணிக்க முடியவில்லை என்பதை பிரம்மாவிடம் முறையிட்டார் யமதர்ம ராஜா!

அப்போது அங்கு தோன்றி சிவபெருமான்,”யமதர்ம ராஜனே இனி கவலை வேண்டாம்!மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுத்தும் பணியை இனி இவர் உன் அருகில் இருந்து பார்த்துக்கொள்வார்”என சித்திர குப்தரை அனுப்பி வைத்தார்.

சித்ரா பௌர்ணமியன்று சித்திர குப்தரை வழிபடுவதால் எம பயம் நீங்குவதோடு, நம் பாவங்களை பொருத்துக் கொள்வார்!

இந்த சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தரை வழிபடுவதால் உங்கள் பாவக்கணக்குகள் குறைந்து புண்ணிய கணக்குகள் அதிகமாகும்.மேலும் ஆயுள் விருத்தியும்,செல்வ வளத்தையும் அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.

சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து வாசலில் மா கோலமிட்டு,பொங்கல் வைத்துவாழை இலை இட்டு அதில் பொங்கலோடு முக்கனிகளை பரப்பி அதனோடு எல்லா காய்கறின் கூட்டும்,பால் பாயசமும் படைத்து. சித்திர குப்தரை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும்.

இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

தெரியாமல் செய்த தவறு களை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.

“நான் மலையளவு செய்த பாவத்தை கடுகளவு ஆக்குக!!கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவு ஆக்குக”என சித்திர குப்தரை மனம் உருகி வழிபட வேண்டும்.

இந்த சித்ரா பௌர்ணமி அன்று கல்வி பயிலும் வசதி இல்லாத மாணவ செல்வங்களுக்கு நோட்டு,பேனா வாங்கி கொடுப்பது சிறப்பாகும்.

ஜோதிட ரீதியாக சித்ரா பௌர்ணமி வழிபாடு மிகச்சிறந்த பரிகாரமாகும்.

மனதுக்கு காரகன் சந்திரன்!நல்ல எண்ணம்,நல்ல மனநிலை,தாயாரின் நிலை,தனம் இவற்றை அருளக்கூடியவர் சந்திரன்.

சந்திரபகவானின் அருள் பெற சித்ரா பௌர்ணமி விரதம் கடை பிடிப்பது மிகச்சிறப்பானது இதனால் மனமும்,எண்ணமும் சிறப்படையும்,பொருளாதார மேன்மை கிடைக்கும் அதே போல் தாயாரின் உடல் நலம் மேம்படும்.

குறிப்பாக மன சஞ்சலம் கொண்டவர்கள்,மன சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சித்ரா பௌர்ணமி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

அதே போல் பெண்கள் இந்த விரதத்தை கடை பிடித்தால் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றியதற்கு சமமான பலன் கிடைக்கும்.மாங்கல்ய பலம் பெறும் நாள்.

சித்திரை நட்சத்தின் அதிபதி செவ்வாய்.இந்த சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்ரா பௌர்ணமி அன்று
சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

செவ்வாய் தோசத்தால் பல வழிகளிலும் பாதிக்கப்படுடவர்கள் சித்ரா பௌர்ணமி விரதத்தை கடைப்பிடிப்பதால் செவ்வாய் தோசம் நீங்கும்.

திருமண தடை அகலும்,இல்லறம் சிறந்தோங்கும்,ஆயுள் அதிகரிக்கும்,விபத்து கண்டங்கள் நீங்கும்.

நவக்கிரகங்களில் கேதுவின் தேவதை சித்திர குப்தர்தான்.

கேதுவால் ஏற்படும் புத்திர தோசம்,களத்திர தோசம்,மாங்கல்ய தோசம்,நாக தோசம் உள்ளிட்ட அனைத்து தோசங்களும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தரை விரதமிருந்து வழிபடுவதால் நீங்கும்.

தடைகள் மன குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். புத்திரபாக்கியம் ஏற்படும்,திருமணத்தடைகள் அகலும். தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்திர குப்தரை வணங்குவதால் நம்முடைய அத்தனை துன்பங்களையும் நீக்கி,செல்வத்தை அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.

மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனிதர்களுக்கு மேலான ஒரு சக்தி தொடர்ந்து கண்காணிக்கிறது. அதனால், தீய செயல்களை எதிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே சித்ரா பௌர்ணமி திருநாள் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

Leave A Reply

Your email address will not be published.