நண்பன் மூலம் மனைவியைக் கொலை செய்த இளைஞர்! – காரணம் வெளிவந்தது.

ஆயுள் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இளைஞர், தனது நண்பருக்கு 20 இலட்சம் ரூபாவையும், வாடகை வாகனம் ஒன்றையும் கொடுத்து, விபத்தை ஏற்படுத்தி தனது மனைவியைக் கொலை செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி எல்பிட்டிய, பிடிகல – மாபலகம பிரதேசத்தில் 40 வயதுடைய பெண் ஒருவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரை விபத்துக்குள்ளாக்கிய ஜீப் ரக வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தது.

இது குறித்து எல்பிட்டிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பெண் ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர் என்றும், அவர் 4 நிறுவனங்களிடம் 50 இலட்சம் ரூபாவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மனைவியைக் கொலை செய்து, அதனை விபத்து எனக் காப்புறுதி நிறுவனங்களிடம் நிரூபித்து ஆயுள் காப்பீட்டுகளைப் பெறுவதற்குச் சந்தேகநபர் திட்டமிட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேகநபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் வேலையற்ற இளைஞர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.