ஆஸ்திரேலியா நாடு கடத்திய 41 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு…

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட வேளையில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 இலங்கையர்கள், கிறிஸ்மஸ் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-013 விமானத்தில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் , இன்று காலை 09.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் கடல் கடந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்று மூத்த அதிகாரிகளும் இக்குழுவினரை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுடன், அதே விமானத்தில் பெருமளவிலான அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் குழுவை கையளித்துள்ளனர்.

பின்னர், தேசிய புலனாய்வு மற்றும் தகவல் பிரிவின் விசாரணையின் பின்னர், இந்தக் குழுவினரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்தக் குழுவினரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.