குளவி கொட்டுக்கு இலக்காகி 3 வயது சிறுமி பலி.

வவுனியா  ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய், இரு குழந்தைகளுடன் அவரின் மகளும் சென்றுள்ளனர்.

காணியில் இருந்த மரம் ஒன்றினை வெட்டிய சமயத்தில் மரத்தினுள் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து அவர்கள் நால்வர் மீது கொட்டியுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய அவர்கள் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாய் (வயது- 61), மகள் (வயது-36 , மகளின் பிள்ளைகள் (வயது -03) , (வயது- 3மாதம்) ஆகியவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 6ம் வாட்டில் அனுமதிப்பட்டிருந்த 3 வயது சிறுமி இன்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த தாய், மகள், மகளின் 3மாத குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.