வவுனியாவில் முன்னாள் காதலியை சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் தற்கொலை!

வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீலியாமோட்டைப் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வெளியில் சென்றுவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது வீட்டின் அறையில் உறங்கிகொண்டிருந்த தனது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாகத் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், அதனுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், தேடப்பட்ட இளைஞர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்துக்கு முன்பாகச் சூட்டுக்காயத்துடன் சடலமாகக் கிடந்தமை கண்டறியப்பட்டது.

அவரது சடலத்துடன் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் நியூட்டன் தர்சினி (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தாயும், சிவபாலன் சுயாந்தன் (வயது 24) என்ற இளைஞருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை உயிரிழந்த இளைஞர் காதலித்து வந்துள்ளார் என்று அயலவர்கள் தெரிவித்ததுடன், அந்தப் பெண் திருமணம் முடித்த பின்னரும் அவருக்குத் தொடர்ச்சியான தொந்தரவுகளைக் கொடுத்து வந்திருந்தார் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே, உயிரிழந்த இளைஞர் இடியன் துப்பாக்கி மூலம் அந்தப் பெண்ணைக் கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலங்களைப் பார்வையிட்ட நீதிவான் அவற்றை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாரைப் பணித்தார்.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.