ஒரே நாள் இரவில் ரூ.100 கோடிகளுக்கு அதிபதியான கூலித் தொழிலாளி!

தினசரி வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்துபவருக்கு பல கோடிகளை காண்பது உண்மையில் சாத்தியமில்லாத விஷயம் தான். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது நசிருல்லா என்ற கூலித் தொழிலாளி ஒரே நாள் இரவில் ரூ.100 கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.

நசிருல்லா மண்டலம், முர்ஷிதாபாத் மாவட்டம், தேகங்கா கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் அக்கவுண்ட் உள்ளது. அந்த அக்கவுண்டில் வெறும் ரூ.17 மட்டுமே இருப்பு இருந்ததாம்.இந்நிலையில் நசிருல்லாவின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி வந்தது எப்படி என்பது குறித்து சைபர் குற்றப்பரிவு காவல்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பும் வரையில் அவருக்கு இந்த விஷயமே தெரியவில்லை. மேலும், இதுதொடர்பாக காவல் துறையினரும் ஃபோனில் தொடர்பு கொண்டு நசிருல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

கூகுள் பே மூலம் சரிபார்ப்பு : தன்னை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை முகம்மது நசிருல்லாவால் யூகிக்க முடியவில்லை. உடனடியா கூகுள் பே ஆப் மூலமாக போலீஸார் சொன்னது உண்மைதானா என்பதை அவர் பரிசோதனை செய்து கொண்டார். அக்கவுண்டில் ரூ.100 கோடி இருப்பது உண்மை என்றாலும் அது எப்படி வந்திருக்கும் என்று அவருக்கு தெரியவில்லை.

விசாரணைக்கு அழைப்பு : வருகின்ற மே 30ஆம் தேதி நசிருல்லா நேரில் விசாரணைக்கு வர வேண்டும் என்றும், அன்றைய தினம் இந்தப் பண வரவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சைபர் பிரிவு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நசிருல்லாவுக்கு தற்போது 26 வயது ஆகிறது. தன்னுடைய பெற்றோர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அவர் வசித்து வருகின்றார். கூலி வேலைக்குச் சென்று இவர் ஈட்டும் வருமானம் மட்டுமே ஒட்டுமொத்த குடும்பத்தின் நிதி ஆதாரமாக இருந்து வருகிறது.

எந்தவித சம்பந்தமும் இல்லாமல் பெரும் தொகை தன்னுடைய அக்கவுண்டிற்கு வந்திருப்பதால் காவல் துறையினர் கைது செய்யலாம் என்றும், அடித்து விசாரணை நடத்துவார்கள் என்றும் நசிருல்லா அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தனக்கு இந்தப் பணம் வேண்டாம் என்றும், இதை அனுப்பி வைத்தவர்களே திருப்பி எடுத்துக் கொள்ளட்டும் என்றும் நசிருல்லா தெரிவிக்கிறார்.

முன்னதாக, குறைவான பேலன்ஸ் இருந்த காரணத்தால் நசிருல்லாவின் அக்கவுண்டை முடக்கி வைக்க பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்களாம். ஆனால், திடீரென்று ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்டது எப்படி என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார் அவர். அதைவிட மே 30ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணையில் என்னென்ன கேள்விகளை கேட்பார்கள் என்ற அச்சம்தான் அவர் மனதை வாட்டி வதைக்கிறதாம்.

Leave A Reply

Your email address will not be published.