ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வெளுத்து வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்- சிஎஸ்கே அணிக்கு 215 ரன்கள் இலக்கு.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 – 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தொடக்க வீரர்களாக சகாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.

ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதனால் ஷுப்மான் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து விர்திமான் சகா- சாய் சுதர்சன் ஜோடியும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து முன்னேறினர். சகா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சாய் சுதர்சனுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 96 ரன்களில் அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

சிஎஸ்கே தரப்பில் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.