மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய 18 வயது இளைஞர் அவரது நண்பர்களால் கொலை !

மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய 18 வயது இளைஞர் அவரது நண்பர்களால் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சபீர் அன்சாரி. இவரது நண்பர்கள் ஷாருக் ஷாஹித் கான், ஷெபாஸ் கான். சபீர் கடந்த வாரம் தனது இரு நண்பர்களுடன் தாபா ஒன்றுக்கு சென்று உணவருந்தியுள்ளனர். இவர்களுடன் சபீருக்கு பழக்கமான இரு நண்பர்கள் உடன் வந்துள்ளனர்.

சாப்பிட்டதற்கான பில் ரூ.10,000 வந்துள்ளது. இந்த பில்லை நீ கட்டிவிடு என்ற சபீரிடம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சபீர் தனக்கு பிறந்தநாள் வருகிறது அதற்காக தான் பணம் சேர்த்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். பிறந்தநாளுக்குள் பணத்தை நாங்கள் திருப்பி தந்துவிடுகிறோம் என நண்பர்கள் கூறவே, சபீரும் பில்லை கட்டியுள்ளார்.

இந்நிலையில், தான் மே 31ஆம் தேதி சபீர் தனது 18ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாளை சபீர் மற்றும் நண்பர்கள் டிஜே பார்ட்டி வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர். எனவே, பிறந்தநாள் அன்று நண்பர்கள் ஷாருக், ஷெபாஸ் ஆகியோரும் சபீரின் பார்ட்டிக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் சபீர் பணத்தை திருப்பி தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அவர்களோ தங்களிடம் பணம் இல்லை என்றுள்ளனர். இது தொடர்பாக சபீருக்கும் நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது சண்டையாக மாற அங்கிருந்த கத்தியை எடுத்து சபீரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் இருந்த சபீரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

சபீரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்நிலையில், தப்பியோடிய சபீரின் நண்பர்கள் ஷாருக், ஷெபாஸ் ஆகிய இருவரும் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.