திறமையற்றவர்களை அமைச்சராக்குவதில் உலகப் புகழ் பெற்றவர் மோடி: சுப்பிரமணியன் சுவாமி

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, திறமையற்றவர்கலை அமைச்சராக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி உலகப் புகழ் பெற்றவர் என விமர்சித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் – சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்துக்குள்ளானது.

இதில், இதுவரை 275 பேர் பலியாகியாகி உள்ளதாகவும், 88 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 187 உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. உடல்களை அடையாளம் காணப்படுவது சவாலாக உள்ளது. 1,175 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடா்பாக ரயில்வே வாரியத்தின் சிக்னல் பிரிவு தலைமை இயக்குநா் சந்தீப் மாத்தூா், ரயில்வே செயல்பாடுகள் துறையைச் சோ்ந்த அதிகாரி ஜெயா வா்மா சின்ஹா ஆகியோா் கூறுகையில், ‘ரயிலுக்கான சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்புமுறையில் (எலெக்ட்ரானிக் இன்டா்லாக்கிங் சிஸ்டம்) செய்யப்பட்ட மாற்றமே, விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகியும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, யாரிடமும் உரிய பதில் இல்லை. இத்தகைய மோசமான விபத்திற்கு பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது.

ரயில்வே அமைச்சர் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் பிரதமர் உடனடியாக ரயில்வே அமைச்சரை பதவி விலகச்சொல்ல வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, “ஹவுரா விரைவு ரயில் மெதுவான ரயிலுக்கான தடத்தில் தான் வந்துள்ளது. எனவே பிரதமரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதவி விலக வேண்டும். திறமையற்ற அல்லது திறமையான முதுகெலும்பு இல்லாதவர்களை அமைச்சர்களாக தேர்வு செய்வதில் நரேந்திர மோடி உலகப் புகழ் பெற்றவர். அதற்கான விலையை அவர் தற்போது கொடுத்து வருகிறார். மணிப்பூர் கலவரமும் மற்றொரு உதாரணம்” என கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசு மற்றும் மத்திய ரயில்வே அமைச்சகமே குற்றவாளி போல் தெரிகிறது! திறந்த மனதுடன் உண்மைகளைக் கேளுங்கள்! என்று கூறியுள்ளார்.

பாஜகவின் மூத்தத் தலைவர் ஒருவரே மூன்று ரயில் கோர விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.