திருமலை – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து; இருவர் சாவு! – மூவர் வைத்தியசாலையில்….

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து இன்று காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற ஹயஸ் வானும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என்று ஹபரன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஹயஸ் வானில் பயணித்த கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

ஹயஸ் வானில் பயணித்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.