வவுனியாவில் கோர விபத்து! தாயும் மகளும் பரிதாபச் சாவு!!

வவுனியா, கண்ணாட்டிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் கண்ணாட்டிப் பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்குச் செல்வதற்காகக் குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டுக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி வேகமாகப் பயணித்த ஹண்டர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே சாவடைந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி (வயது 36), அவரது மகளான சிவலோகநாதன் டினுசிகா (வயது 06) ஆகியோரே இதன்போது உயிரிழந்தனர்.

விபத்து இடம்பெற்ற போது ஹண்டர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தையடுத்து அவர்கள் தப்பிச் சென்ற நிலையில் இருவரை ஊர் மக்கள் துரத்திப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை, விபத்தையடுத்துப் பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தைச் சராமரியாகத் தாக்கிச் சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கும் முற்பட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான போக்குவரத்தும் சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டன.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.