கீவ் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: ஒருவர் பலி- 4 பேர்.

ரஷிய- உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், இரு தரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மூன்று நாட்களாக இரவுநேர தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

நேற்றிரவு உக்ரைனின் தலைநகர் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா டிரோன் மூலம் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் பலியானார். மேலும், 4 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. கீவ் நகர மேயர் விடாலி க்லிட்ச்கோ, “குண்டுவீச்சிற்கு பிறகு சோலோமியான்ஸ்கி, செவ்சென்கிவ்ஸ்கி, போடில்ஸ்கி, மற்றும் டார்னிட்ஸ்கி ஆகிய நகரங்களில் மீட்பு நடவடிக்கைக்காக அவசர உதவிக்குழுவினர் விரைந்தனர்” என தெரிவித்தார்.

உக்ரைன் தலைநகரின் மத்தியில் உள்ள சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் ரஷிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் டிரோன் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். டார்னிட்ஸ்கி மாவட்டத்திலும் இது போன்று கீழே வீழ்ந்த ரஷிய டிரோன்களால் ஒரு வீடு சேதமடைந்தது. செவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தின் பால்கனி தீக்கிரையானது. இந்த தாக்குதலை ஈரான் நாட்டு ஷாஹெட் டிரோன்கள் மூலம் நடைபெற்ற ஒரு “பெரும் தாக்குதல்” என விமர்சித்துள்ள கீவ் நகர ராணுவ தலைமை அதிகாரி செர்ஹி பாப்கோ, “விமானப்படையின் எதிர்தாக்குல் படை, சுமார் ரஷியாவின் 10 தாக்குதல் இலக்கை அழித்தது” என டெலிகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவையல்லாமல் உக்ரைனின் வேறு சில பகுதிகளான தென்கிழக்கில் உள்ள சபோரிழியாவிலும், தெற்கில் உள்ள மைகோலெய்வ் பகுதியிலும் மற்றும் மேற்கில் உள்ள மெல்னிட்ஸ்கி பகுதியிலும் தாக்குதல் நடந்திருக்கிறது. நேட்டோவின் உறுப்பினராகும் முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ உச்சி மாநாட்டிற்காக லிதுவேனியா நாட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.