இந்தியப் பிரதமரிடம் 6 தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்த கோரிக்கை என்ன? – வெளியானது கடிதம்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கடிதம் அனுப்பியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவை இணைந்து தயாரித்த இந்தியப் பிரதமருக்கான கடிதத்தை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளான புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகளின் தலைவர் இ. கதிர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில்,

“1956ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் சமஷ்டியை வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் விருப்பமாகவும் – இறுதித் தீர்வாகவும் சமஷ்டியே உள்ளது.

எனினும், தற்போதைய நிலையில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலமாக உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்த வேண்டும். அத்துடன், மாகாண சபைகள் தேர்தலை நடத்தவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாக செல்லவுள்ளளார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்வரும் 21ஆம் திகதி சந்தித்துப் பேசவுள்ளார். இதன்போது, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை இந்தியப் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்று கோரி தமிழ் கட்சிகள் அவருக்குக் கடிதம் எழுதி வருகின்றன. முன்னதாக சமஷ்டி தீர்வை வலியுறுத்தியும் 13ஐ வலியுறுத்த வேண்டாம் என்றும் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பியது. இந்தநிலையில் 6 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கடிதம் நேற்றுமுன்தினம் (13) இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.