தபால் சேவை மக்கள் காலடிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் : வியாழேந்திரன்

தபால் சேவை மக்கள் காலடிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். புதிய தொழில் நுட்பத்தின் ஊடாகவும் மேலும் வளர்த் தெடுக்கப்பட்டு மக்களுக்கான சேவையை மேலும் சிறந்த முறையில் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்ன நிலையத்திற்கு தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் சி. வியாழேந்திரன் பார்வையிடுவதற்காக விஜயம் செய்த போது ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
நாங்கள் தபால் சேவையை ஒரு வினைத் திறன்மிக்க சேவையாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றோம். தபால் தொடர்பாக இருக்கின்ற பிரச்சினைகள் தேவைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன். இந்த இடத்தில் தபால் சேவையாளர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தேவைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும். அது இன்னும் புதிய தொழில் நுட்ப முறைமைகள் உள்வாங்கப்பட்டு அந்த புதிய தொழில் நுட்ப முறை ஊடாக இன்னும் வளர்த் தெடுக்கப்பட்டு மக்களுக்கான சேவை மிகச் சிறப்பான முறையில் கிடைக்கப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்ட போது எமது ஜனாதிபதி அவர்கள் மிகச் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இந்த கொரோனா தொற்றில் மிகப் பெரிய நாடுகள் சவால்களை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் நாட்டின் ஜனாதிபதி , பாதுகாப்புத் துறையினர்கள், சுகாதாரத் துறையில் உள்ளவர்கள், ஏனைய அதிகாரிகள் அனைவரும் இதை வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளார்கள். அந்த வகையில் தபால் மத்திய பரிவர்த்தன நிலையம் மிகப் சிறப்பாக இடம்பெற்றது. பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் தொடக்கம் மக்களுக்கான தபால் சேவையை தபால் திணைக்களம் மிகச் சிறப்பாக மேற்கொண்டு இருக்கிறது. அதற்கு நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உலகத்தில் எந்த நாட்டில் தபால் சேவை மிகச் சிறப்பாக இருக்கின்றதோ எங்கள் நாட்டினுடைய தபால் சேவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை தற்பொழுது எடுத்துக் கொண்டு இருக்கின்றோம். அதற்கான புதிய திட்டங்களை நாங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம். அதுதான் ஜனாதிபதியுடைய எண்ணமாகவும் இருந்து கொண்டு இருக்கிறது. எங்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லை அவர்கள் கிடைத்துள்ளார். எனவே அவருடைய ஆலோசனைகள் வழிகாட்டல்களை உள்வாங்கி ஜனாதிபதியின் சுவிட்சத்தின் பால் நாட்டைக் கொண்டு செல்வோம் என்ற உயரிய நோக்கத்தை அடைய நிச்சயமாக தபால் சேவையை ஒரு வினைத் திறன்மிக்க சேவையாக கட்டி எழுப்புவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தபால் வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ. சேனாநாயக. தபால் அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன உள்ளிட் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி
12-09-2020

Leave A Reply

Your email address will not be published.