மோடி சொல்லியனுப்பிய செய்தியை ரணில் நடைமுறைப்படுத்த வேண்டும் – மனோ வலியுறுத்து.

“மாகாண சபைத் தேர்தல், மலையக மக்களுக்கான ஒதுக்கீடு இரண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சொல்லியனுப்பியுள்ள செய்தி” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியத் தலைவர்கள் சந்திப்பு மற்றும் இந்தியப் பிரதமரின் அறிவிப்புகள் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல், இந்திய வம்சாவளி மலையகத் தமிழருக்கு இந்திய ரூபா 75 கோடி ஒதுக்கீடு ஆகியவை இந்தியப் பயணத்தில் பிரதமர் மோடி, எமது ஜனாதிபதிக்குச் சொல்லி அனுப்பிய செய்தி. இவை இரண்டையும் வெறும் கட்சி அரசியல், இனவாத அரசியல் ஆகியவற்றுக்கு அப்பால், நாட்டின் அரசியல் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாகப் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்.

இவை எதுவும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழருக்கும், மலையகத் தமிழருக்கும் முழுமையான தீர்வுகளைத் தந்து விடப்போவதில்லை. ஆனால், இவற்றைச் செய்தாவது இலங்கை அரசு தனது நேர்மையை பறைசாற்ற வேண்டும்.

இந்திய அரசுக்கு நன்றி. இலங்கையில் துன்புற்று வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு எப்போதும் தார்மீகக் கடப்பாடு உண்டு.

1964 இன் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1987 இன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டப் பொறுப்பும் உண்டு. அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைத்தான் நாம் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.