கூட்டமைப்பு எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமிப்பர்! – சஜித் அணியும் வருவது உறுதி என்கிறார் பிரசன்ன?

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்ததலில் ஆளுங்கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்” – என்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுணங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஆளுங்கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ரணில் விக்கிரமசிங்கதான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று உறுதியாக உள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இந்த உண்மை பகிரங்கமாகத் தெரியவரும்.

அதேவேளை, எதிரணியில் உள்ளவர்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வரவேண்டும் என்று விரும்புகின்றனர். சஜித் கட்சியில் உள்ளவர்களில் பலர் ரணிலுக்கு மறைமுக ஆதரவைத் தற்போது வழங்கி வருகின்றனர்; ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்கள் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

எனவே, ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் எதிரணியில் உள்ளவர்கள் ரணிலுடன் கைகோப்பார்கள் இதுதான் உண்மை நிலவரம்.

இதைவிடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆளும் தரப்பில் உள்ள ஒரு சிலர் வெளியிடும் முரண்பட்ட கருத்துக்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.