பறாளாய் முருகன் வர்த்தமானி தொடர்பில் அமைச்சரவையில் ஆராய்வு! – கவனம் செலுத்துவதாக ரணில் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம், சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தைத் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வெளியான வர்த்தமானி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மௌனம் காத்ததுடன் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் (07) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் சங்கமித்தை நட்டதாகத் தெரிவித்து வெளியான வர்த்தமானி குறித்து பிரஸ்தாபித்தார்.

“வரலாற்றுப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலருடனும் இது தொடர்பில் கலந்துரையாடினேன். அது சங்கமித்தையால் நடப்பட்டது என்பது தவறான தகவல் எனக் குறிப்பிட்டனர்” என்பதையும் அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.

“நாட்டில் இன ஐக்கியம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், தொல்பொருள் திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் இன ஐக்கியம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுகின்றது” என்றும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் வர்த்தமானி தொடர்பில் பேசும்போது அமைச்சரவையில் கலந்துகொண்ட துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மௌனம் காத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது தொடர்பில் கவனம் செலுத்தி ஆராய்வதாகத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.