ஜனாதிபதி ரணிலின் முன்னெடுப்புக்கள் ‘அற்புதம்’ – பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழ் தரப்புகளிடம் டக்ளஸ் வலியுறுத்து.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அற்புதமானவை என்றுஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு, வடக்கு கிழக்கில் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர் , “13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி சபையில் முக்கியமான கருத்துக்களை தெரிவித்தார். அதில், அவர் பல காத்திரமான விடயங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

அதனை நாம் வரவேற்கின்றோம். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அற்புதமானவை.

அந்த வகையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் முழுமையான ஆதரவளிக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.