மட்டக்களப்பு விபத்தில் இளம் ஆசிரியர் மரணம்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை – புனாணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஆங்கிலப் பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 25 வயதுடைய ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த எஸ்.எச்.எம்.அஸாம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி கல்விக் கோட்ட ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப் பாட ஆசிரியரான இவர் ரிதிதென்னையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்ஸில் மோதி சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

இவ் விபத்தில் பலத்த காயமடைந்த மற்றையவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த இளம் ஆசிரியரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.