இறுதித் தோட்டா முடியும் வரைப் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் பிரபாகரன்! – அவரின் மகிமையைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

“தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். இந்நிலையில், அவரையும், அவரது குடும்பத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள் புலம்பெயர் தமிழர்கள்.”

– இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பிரபாகரனோ அல்லது அவரின் குடும்பத்தில் எவருமோ இன்று உயிருடன் இல்லை. இறுதிப் போரில் பங்கெடுத்த படைத் தளபதிகளில் ஒருவன் என்ற ரீதியில் இந்த உண்மையை மீண்டுமொரு தடவை கூறுகின்றேன்.

இறுதி யுத்தத்தில் இறுதி வரைக்கும் போரிட்டு தன் குடும்பத்துடன் சாவடைந்தவர்தான் பிரபாகரன். அவர் பயங்கரவாத அமைப்பின் தலைவர். ஆனால், அவர் தனது கொள்கையில் இறுதி வரைக்கும் மாறாமல் நின்ற ஒரு தலைவர். அவருக்கென சில மகிமைகள் உண்டு. அந்த மகிமைகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரபாகரனின் மனைவியின் சகோதரி என்று கூறப்படும் பெண் ஒருவரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள காணொளி வலுக்கட்டாயமாக ஒரு தரப்பால் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பிரபாகரனின் மனைவி மதிவதனி தொடர்பிலும், அவரின் மகள் துவாரகா பற்றியும் அந்தப் பெண் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பொய்யானவை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.