சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை – உதயநிதி ஸ்டாலின்

சனாதன தர்மம் குறித்து தான் பேசியதை மாற்றி சூழ்ச்சி செய்யப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதானத்தை ஒழிப்போம் என பேசியது தொடர்பாக எத்தனை வழக்குகளையும் சந்திக்கத் தயார் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜாதியை வைத்து கொண்டு நீங்கள் எல்லோரையும் கோவிலுக்குள் விட்டீர்களா? அதற்கு நாங்கள் சட்ட போராட்டம் நடத்தினோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று நீங்கள் நினைத்தீர்களா?.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறினேன் .தற்போது அதைவிட அதிக உறுதியுடன் உள்ளேன். எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.

நான் பேசாத வார்த்தைகளை அவர்கள் கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் நான் பேசிய காணொளிகள் உள்ளது. நான் பேசியதை மாற்றி சூழ்ச்சி செய்கிறார்கள்.

அது இனப்படுகொலையென்றால்..

காங்கிரஸ் முக்த்பாரத் என பிரதமர் மோடி கூறுகிறார். அதற்காக காங்கிரசில் உள்ளவர்களை எல்லாம் கொல்ல முடியுமா? அவர் அந்த கொள்கையைத்தான் எதிர்க்கிறார். அது இனப்படுகொலை என்றால் நான் பேசியதும் இனப்படுகொலை தான்.

சனாதனம் என்பது நிலையானது, மாற்ற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார்கள். இப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஜாதி பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும்

ஒரு காலத்தில் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது கிடையாது, அது மாற்றப்பட்டுவிட்டது. பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்றார்கள். அதெல்லாம் இப்போது பின்பற்றுகிறோமா ?

மக்களுக்கான உரிமை ஒவ்வொரு காலத்திலும் பெற்றுத் தரப்பட்டு கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம் அதைத்தான் நான் பேசினேன்.

திமுக தொடங்கப்பட்டது சமூக நீதிக்காக தான். எந்த மதத்திற்கு எதிராகவும் நான் பேசவில்லை மதத்திற்குள் இருக்கக்கூடிய ஜாதி பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக பேசுகிறது.

உதயநிதி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக கடிதம்..

இந்த நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பாஜக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் அதிகாரிகளிடம் இதுதொடர்பான கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து இந்தியர்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் நடவடிக்கையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சாக உள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் சாசனப் பதவியில் இருப்பவரிடமிருந்து இத்தகைய கருத்துகள் வருவது கவலைக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அவரின் கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என்றும் தவறினால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் டெல்லி பாஜக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.