கோவிந்த நாமம் எழுதினால் திருப்பதியில் விஐபி தரிசனம்!

ராம நாமம் எழுதுவதை போல் கோவிந்த நாமம் எழுதி அனுப்புபவா்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் அனுமதிக்கப்படும் என்று அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்யபவனில் புதியதாக நியமிக்கப்பட்ட அறங்காவலா் குழுவின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி தலைமையில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி கூறியதாவது:

சனாதன தா்மம் என்பது ஹிந்துக்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று. இது குறித்து நாம் மக்களுக்கு பிரசாரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இளைஞா்களிடையே ஹிந்து பக்தியை பரப்பும் நிகழ்ச்சிகளை ஏழுமலையான் கோவிலில் இருந்து தொடங்க உள்ளோம்.

மேலும் ராமகோடி பாணியில் கோவிந்த கோடியை எழுதும் 25 வயதுக்குட்பட்ட இளைஞா்களுக்கும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கும், விஐபி பிரேக் தரிசனம் ஏற்பாடு செய்யப்படும். 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமங்கள் எழுதியவா்களுக்கு தரிசனம் தர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பா் 18 ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க உள்ளாா். 2024-ஆம் ஆண்டின் டைரிகள் மற்றும் நாட்காட்டிகள், தினசரிகள் வெளியிடப்பட உள்ளன.

மும்பை பாந்த்ராவில் ரூ.5.35 கோடியில் தேவஸ்தான தகவல் மையம் மற்றும் ரூ.1.65 கோடியில் ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணி நடைபெற உள்ளது.

தேவஸ்தான மடப்பள்ளியில் 413 பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.2.46 கோடியில் தேவஸ்தான மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள பழைமையான 3 சத்திரங்களுக்கு பதிலாக, ரூ.600 கோடியில், அச்யுதம், ஸ்ரீபாதம் குடியிருப்பு வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’, என்று கூறினாா்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடா்புடைய உள்ளூா் கோயில்களின் நிா்வாகத்தை மேற்கொள்ள புதிய தலைவரை தேவஸ்தானம் நியமித்துள்ளது. இதற்கு முன் தலைவராக நியமிக்கப்பட்ட சேகா்ரெட்டிக்கு மீண்டும் உள்ளூா் கமிட்டியின் தலைவராக நியமித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.