திருமலையில் ரயிலில் பாய்ந்து தந்தையும் மகளும் உயிர்மாய்ப்பு.

திருகோணமலையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கிச் சென்ற இரவு தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் (06) இரவு திருகோணமலை, கந்தளாய் – பராக்கிர மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – கந்தளாய் ரயில் நிலையத் தண்டவாளத்தின் அருகே தந்தையும், மகளும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தனர் எனவும், ரயில் வந்ததும் தந்தையும், மகளும் ரயிலின் முன்னே குதித்தனர் எனவும் நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் 38 வயதுடைய தந்தையும், 6 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகளுடன் உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி குவைத் நாட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வரும் நிலையில் அவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருக்கின்றார் என்று கேள்வியுற்ற கணவன் விரக்தியில் கடிதம் ஒன்றை எழுதி சட்டைப் பையில் வைத்துவிட்டு மகளுடன் தற்கொலை செய்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.