உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : நடந்தது என்ன?

பிரிவினையால் திட்டம் சிதறியது! -01
உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் சஹரானின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அது இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள்.

அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவரின் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்கும் சஹரானின் கனவு கலைந்து போகிறது. அந்த இரண்டாவது தலைவரும் இப்போது கைதாகி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளார்.

கடந்த தாக்குதல்கள் குறித்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த பெரும்பாலான தகவல்களை அடி முதல் நுனிவரை இப்போது கைதாகியுள்ளோர் கக்கி விட்டார்கள். அதனடிப்படையில் சஹரானின் அமைப்பினது வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் உதவிய உள்நாட்டு – வெளிநாட்டு நபர்கள் முதல் நாடுகள் குறித்த தகவல்களையும் கைதானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தேசிய ரீதியாக பல வியாபாரிகள் பண உதவி செய்துள்ளார்கள். அவர்களில் தெமட்டகொடை இப்ராகிம் குடும்பத்தினர் முதன்மையானவர்களாக உள்ளனர்.
புலனாய்வு துறையினரது கணிப்பின் படி தற்கொலைதாரிகளில் அநேகர் இப்போது கைதாகியுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதற சத்தியப் பிரமாணம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த 5 பேர் கூட தற்போது கைதாகி உள்ளனர்.

அவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை பகுதியிலுள்ள ஒரு முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள். தவிர இன்னும் 150 பேர் வரை கைதாக வேண்டியவர்கள் நாட்டுக்குள் உள்ளதாக குற்றவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அவர்கள் தற்கொலைதாரிகள் இல்லாவிடினும் சஹரானின் கடும் ஆதரவாளர்களாவார்கள். அத்தனைபேரும் சஹரானின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டவர்களாவார்கள்.
விசாரணைகளின் போது இறுதியாக தற்கொலைதாரிகளாவதற்கு மிஞ்சியவர்கள் தெமட்டகொடை இப்ராகிமின் குடும்பமும் , காத்தான்குடி மற்றும் கல்முனையைச் சேர்ந்த சஹரானின் குடும்பமும் மட்டுமேயாகும். அதில் அதிகமான பங்களிப்பு சஹரானின் குடும்பத்தாருடையதாகும்.

கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் இருந்த வீட்டில் இறந்து போன தற்கொலைதாரிகளில் அநேகர் சஹரானின் உறவினர்களாவார்கள். சஹரானின் தலைமையை ஏற்காமல் விலகி இரண்டாவது தலைமையை ஏற்றோரில் பெரும்பாலானவர்கள் மாவனல்ல மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.

துருக்கி நாட்டின் ஊடாக சிரியா சென்று IS பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சஹரானுக்கு IS தொடர்புகள் ஏற்பட்ட விதம் தொடர்பான அனைத்து விபரங்களும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

நீர்கொழும்பு கட்டுவபிட்டியில் கிடைத்த தகவலொன்றால்தான் சம்மாந்துறை ஆயுத களஞ்சியம் கைப்பற்றப்பட்டது. கட்டுவபிட்டி புனித. செபஸ்தியார் தேவாலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய முகமது ஹஸ்த்து மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். திருமணத்தின் பின் இவரது மனைவியான புலஸ்தீனி ராஜேந்திரன் எனப்படும் சாராவின் கல்முனையிலுள்ள A.F.C. வீதியிலுள்ள வீட்டில்தான் குடியிருந்துள்ளார்கள். மனைவியான சாராவும் தற்கொலை செய்து கொண்டு சாவதற்கு தயாராகவே இருந்துள்ளார். சாரா இரண்டாவது தாக்குதலுக்காகவே காத்திருந்தார்.

கட்டுவபிட்டி கோயில் தாக்குதலை நடந்த கடந்த ஜனவரி மாதமே திட்டம் தீட்டியுள்ளார்கள். அந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டானை எனும் இடத்தின், டேவிட் பெரேரா மாவத்தையிலுள்ள வீடொன்றை கடந்த பெப்ரவரி மாதம் வாடகைக்கு இவர்கள் எடுத்துள்ளார்கள். அதன் வாடகை 45’000 ரூபாவாகும். முதலில் அங்குதான் வெடி மருந்துகள் உட்பட்ட உபகரணங்களை கொண்டு வந்து வைத்துள்ளார்கள். வான் மற்றும் லொறிகளில் ஒரு அறை நிறையக் கூடிய அளவு வெடி மருந்துகள் மற்றும் இரசாயண திரவங்களை பல முறைகளாக சந்தேகப்படாவண்ணம் கொண்டு வந்து வைத்திருந்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெடித்த குண்டுகளுக்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களை பாணதுறை கரிக்கமுல்லை எனும் இடத்திற்கு கொண்டு சென்றுதான் தயார் செய்துள்ளார்கள். கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு கட்டுவபிட்டியவில் எடுத்த வீட்டில் வைத்தே தயாரித்துள்ளார்கள். இரண்டாவது தாக்குதலுக்கான தற்கொலை குண்டுகள் குளியாப்பிட்டியில் உள்ள குண்டு தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் இதே வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகுதி வெடி மருந்துகளை ஏப்ரல் 11ம் திகதி பாதுகாப்பாக வைக்க சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்துள்ளார்கள். நீர்கொழும்பிலிருந்து வாடகைக்கு எடுத்த லொறியோன்றில் , வீடு மாறுவது போல் வீட்டு பொருட்களோடு இந்த வெடி பொருட்களை சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

விட்டிலிருந்த பொருட்களை அனுப்பிய பின்னும் கூட , யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாதென , கட்டுவபிட்டிய தாக்குதல்தாரியின் மனைவி சாராவோடு சிலர் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கட்டானை வீட்டை விட்டு 18ம் திகதி வெளியேறியுள்ளனர். ஆனாலும் 20ம் திகதி மீண்டும் திரும்பிவரும் குண்டுதாரி 21ம் திகதி கட்டுவபிட்டி தேவாலயத்துக்கு தற்கொலை தாக்குதல் நடத்த இந்த வீட்டிலிருந்தே சென்றுள்ளார்.

தற்கொலை தாக்குதல்கள் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த தற்கொலைதாரியை போலீசார் அடையாளம் கண்டு கொள்கின்றனர். புலனாய்வாளர்கள் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை கடும் தேடுதல்களின் பின் கண்டு பிடிக்கின்றனர். அதற்காக வீதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சீசீடீவி கமாரக்களை பரீட்சித்துள்ளனர். அதை வைத்து கண்டு பிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மூலம் அங்கிருந்து சென்றவர்களது தகவல்கள் மற்றும் சென்ற இடங்களை கண்டறிந்து கொள்கின்றனர்.

தடயங்களும் தேடல்களும் ! – 2

லொறியின் சாரதி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26ம் திகதி , அதிரடிப் படையினர் சம்மாந்துறை வீடுடொன்றை முற்றுயிடுகிறார்கள். அதன் பின் நிந்தாவூரில் மற்றொரு வீடொன்றையும் முற்றுகையிடுகிறார்கள். அங்கிருந்து வெடி பொருட்கள் மற்றும் இரசாயண பொருட்கள் பல கிடைக்கப் பெறுகின்றன. அத்தோடு குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் 1000க்கும் மேல் கண்டு பிடிக்கப்படுகின்றன. அவற்றைத் தவிர தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை தாக்கிய பின் , IS அமைப்பு அந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரியதாக வீடியோவில் காட்டிய தற்கொலைதாரிகள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பின்னால் தெரிந்த IS பெனரும் கூட அங்கிருந்து கிடைக்கின்றன.

இந்த இரு வீடுகளும் தாக்குதலுக்கு முன்னரே வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த வீடுகளாகும். சம்மாந்துறையில் இருந்த வீடு , 30 ஆயிரம் ரூபாய் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. நிந்தாவூர் வீடு , 20 ஆயிரம் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. அந்த இரு வீடுகளும் காத்தான்குடி வாசியான மொகமட் நிபாஸ் என்பவர் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. அவரும் ஒரு பயங்கரவாத தற்கொலைதாரியாகும்.


பயங்கரவாதிகள் 15 பேர் கல்முனை சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு செத்தார்கள் அல்லவா? அதற்கு முன் சஹரான் மற்றும் ஏனைய பயங்கரவாதிகள் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை தொடுக்கும் போது , சஹரானின் மனைவியான பாத்திமா காதியாவும் கட்டுவபிட்டி தேவாலய தற்கொலைதாரியின் மனைவியான சாராவும் , சஹரானின் சகோதரியும் , தாயும் , அவர்களது சிறு பிள்ளைகளும் திகாரி என்ற இடத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் தாக்குதல் நடத்த இரு தினங்களுக்கு முன்தான் , அங்கு சென்று மறைந்து இருந்துள்ளார்கள். அங்கு செல்வதற்காக , ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரது வானை பயன்படுத்தியுள்ளார்கள்.
10 நாட்களாக அந்த வானில் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்திருக்கிறார்கள்.

கிரியுல்லையிலுள்ள கடையொன்றில் 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளை உடைகளை கொள்வனவு செய்யவும் அந்த வானில்தான் சென்றுள்ளார்கள். அங்கு உடைகளை வாங்கிய அன்றைய இரவே , திகாரி பிரதேசத்திலிருந்து கல்முனையை நோக்கி பயணமாகியிருக்கிறார்கள்.

தனது தலைவரின் மனைவி மற்றும் குடும்பத்தின் நெருக்கமானவர்கள் அங்கு வரும் போது , தங்குவதற்கான வீடொன்றை முகமது நிபாஸ் ஒழுங்கு செய்திருக்கிறார். அதற்காக நிந்தாவூரில் வாடகைக்கு வீடொன்று எடுக்கப்படுகிறது. அங்கிருந்துதான் ஏப்ரல் 26ம் திகதி , சாய்ந்தமருதிலுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டுக்கு இவர்கள் வருகிறார்கள். சாந்தமருது வீடு 4000 ரூபா வாடகைக்கு சில நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்தது.

மொகமட் நிபாஸ் , சஹரானின் இரு சகோதரர்களையும் , தகப்பனையும் சகோதரியின் கணவனையும் , அவர்களோடு வந்த சிலரையும் சாய்ந்தமருது வீட்டில் தங்க வைக்கிறார். சில பொதிகளோடு வந்த அவர்கள் , அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். அவர்களது நடத்தை அயலவர்களுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது.

அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரரை நிறுத்தி அயலவர்கள் தமது சந்தேகத்தை சொல்கிறார்கள். அவர்கள் சொன்ன விபரத்தைக் கேட்டு , வீட்டுக்கு வந்திருப்போரை விசாரிக்கவென வீட்டு பகுதிக்குள் நுழையும் போலீஸ்காரர் மேல் , கூரையின் மேலிருந்து கைக் குண்டொன்று வீசப்படுகிறது. அந்தக் குண்டு , வீட்டுக் கூரையில் இருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்தே வீசப்படுகிறது.

குண்டு வீச்சில் , தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமில்லாமல் அந்த போலீஸ்காரர் தப்பிவிடுகிறார். அந்த குண்டு தாக்குதல் நடந்ததும் , உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு விடயத்தை அறிவிக்கிறார். வேகமாக வந்து அந்த இடத்தை போலீசாரும் இராணுவமும் முற்றுகையிடுகிறது. அவர்களது முற்றுகையோடு வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கி வேட்டுகள் சில கக்கத் தொடங்குகின்றன. இரு தரப்புகளிடையே துப்பாக்கி சமர் ஒன்று ஆரம்பமாகிறது.
இப்படி பலமுறை விட்டு விட்டு துப்பாக்கி சமர் நடக்கிறது. அதன்பின்தான் சில மணி நேரங்களுக்குள் 3 பாரிய குண்டுகள் தொடர்ந்து போல வீட்டுக்குள் இருந்து வெடிக்கின்றன. இராணுவமும் , போலீசாரும் வீட்டை சுற்றி இரவிரவா காத்து நின்றனரே தவிர , இரவு என்பதால் அந்த வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யவில்லை. இதற்குள் இன்னொரு பகுதி படையினரும் , போலீசாரும் சாய்ந்தமருதில் உள்ள ஏனைய வீடுகளை சுற்றி வளைத்து சோதனையிடுகிறார்கள்.

3 வெடி குண்டுகளை வெடித்த பின் வீட்டுக்குள், படையினரும் போலீசாரும் காலை விடிந்த பின்னர்தான் நுழைகிறார்கள். அவர்கள் நுழையும் போது முதலில் காண்பது , T 56 யை மார்போடு கையில் பிடித்தபடி , வீட்டு முற்றத்தில் துப்பாக்கி சூடு பட்டு இறந்து கிடந்த ஒருவரைத்தான். அவர்தான் நிபாஸ். போலீஸ்காரருக்கு முதலில் குண்டை வீசியவரது உடல், வீட்டு கூரையில் உயரிற்று கிடப்பதைக் காண்கிறார்கள். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் படையினரும், போலீசாரும் , ஒரே இடத்தில் குவியலாக சிறு குழந்தைகளோடு பலர் சிதறுண்டு இறந்திருப்பதையும் காண்கிறார்கள்.

அங்கு 14 பேரின் பிணங்கள் குவியலாக கிடக்கின்றன. சில உடல்கள் அடையாளம் காண முடியாபடி சிதைந்து போயிருக்கின்றன. இறந்து கிடந்தோரின் உடல் பாகங்கள் வீட்டின் எல்லா பாகங்களிலும் விசிறிக் கிடக்கின்றன. அந்தப் பிணக் குவியலில் , சஹரானின் இரு சகோதரர்களான முகமது செயின் ஹசீம் , முகமது ரில்வான் மற்றும் தந்தையின் உடல்களாக அடையாளம் காணுகிறார்கள். இந்திய புலனாய்வு துறையான, ரோ அமைப்பினர் கொடுத்த தற்கொலை தாக்குதல்தாரிகளின் பட்டியலில் , சஹரானின் சகோதரரான முகமது ரில்வானின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்களை தவிர சஹரானின் இளைய சகோதரி முகமது சய்ரா ஹசீம் மற்றும் அவரின் கணவர் முகமது ரிசாத் ஆகியோரது உடல்களும் அவற்றோடு இருப்பதை காண்கிறார்கள். இறந்து கிடந்தவர்களை அடையாளம் காண முயன்று கொண்டிருந்த வேளையில் , பக்கத்து அறையொன்றிலிருந்து முனங்கலும் அழுகையும் கேட்கிறது.

அங்கே ஒரு பெண்ணும் , ஒரு குழந்தையும் குண்டு வெடிப்பால் காயப்பட்டு இருப்பது தெரிகிறது. அவர்களை மீட்கும் படையினர் , உடனடியாக முதலுதவிகளை செய்து , அம்பியூலன்ஸ் இரண்டை வரவைழைத்து , அம்பாறை வைத்திசாலைக்கு போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கிறார்கள். அங்கே மீட்கப்பட்டவர்கள் வேறு யாருமல்ல , தற்கொலை செய்து கொண்ட பயங்கரவாதி சஹரானின் மனைவி மற்றும் அவரது மகளாகும். அதேவேளையில் , சஹரானின் 8 வயது மகனும் , இன்னும் 6 குழந்தைகளும் பயங்கரவாதிகளது தற்கொலைக் குண்டு வெடிப்பால் உயிரிழந்து கிடக்கிறார்கள்…….

வவுணதீவு கொலைகளும் சஹரானின் வேலை !

இலங்கையில் உள்ள இஸ்லாமிய பங்கரவாத பயிற்சிக்காக துருக்கி ஊடக சிரியாவுக்கு சென்று, ISIS பயிற்சி பெற்றவர்கள் சிலர் மட்டுமே. அவர்களில் மாவனல்லையில் பெளத்த சிலைகளை உடைத்த சம்பவத்தில் ஈடுபட்ட சாஹிட் இருந்தான். புத்தளம் வன்னாத்திவில்லு பயிற்சி முகாமின் பொறுப்பாளன் அவன்தான். ஏனைய முகாம்களின் பயிற்சியாளர்களாக அவனும் ,சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள் சிலரும் இருந்துள்ளார்கள். தற்போது புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவல்களின்படி சிரியா சென்று பயிற்சி பெற்ற 10க்கும் அதிகமானோர் , சஹரானின் குழுவில் இருந்துள்ளார்கள். அவர்களில் பலர் தற்போது கைதாகி உள்ளார்கள்.
வவுணதீவு போலீஸ் அதிகாரிகள் கொலை , பயிற்சிக்கான ஆயுத சேகரிப்புக்காகவே நடந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின் பாதுகாப்பு பிரிவின் அதிக கவனம் காத்தான்குடியை நோக்கி திரும்பியது. அதன்பின் முழுக் காத்தான்குடி பிரதேசத்தையும் படையினர் சுற்றி வளைத்து சஹரானின் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தார்கள்.
அப்படி 100க் கணக்கானவர்களை சுற்றி வளைத்து , கைது செய்து விசாரித்த போது , சஹரானின் உறவினர்கள் பலர் கைதானார்கள். அவர்களில் முகமது ஷாரிப் ஆதம் லெப்பை எனப்படும் கபூர் மாமா மிக முக்கியமானவர். அவர்தான் சஹரானின் வாகன சாரதி. அவரை விசாரித்ததில் அநேக உண்மைகள் வெளியாகின.
2018 நவம்பர் 30ம் திகதி இரவு , வவுணதீவு போலீஸ் காவல் அரணில் சேவையிலிருந்த இரு போலீசாரை வெட்டிக் கொத்தி, வெடி வைத்து கொலை செய்த விபரம் அவரிடமிருந்தே வெளியானது. அந்த கொலை நடந்த காலம் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்றதால் , அந்த கொலையின் சந்தேகம் முழுவதும் , முன்னால் விடுதலைப் புலிகள் மேல் திசை திருப்பப்பட்டு இருந்தது.
எனவே போலீசார் முன்னால் புலிகளில் இருந்த சிலரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தார்கள். கபூர் மாமாவின் வாக்கு மூலத்தில்தான் , துப்பாக்கி பயிற்சிக்கு போதியளவு துப்பாக்கிகள் இல்லாமையால் சஹரானின் உத்தரவில் அங்கிருந்த போலீசாரை படுகொலை செய்து விட்டு ஆயுதங்களை எடுத்தது தெரிய வந்தது.
அதற்கு தலைமை தாங்கியவன் மில்ஹான். தேசிய தவ்ஹித் ஜமாத்தின் ஆயுதப் பொறுப்பாளன் அவன்தான். ரோ புலனாய்வு துறை இலங்கை அரசுக்கு தந்த பட்டியலில் அவனது பெயரும் இடம் பெற்றிருந்தது. ISIS அவனுக்கு வைத்த பெயர் அபுசீலன்.
அன்றைய வவுணதீவு தாக்குதலுக்கு கல்முனையிலிருந்து 4 பேர் , இரு மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளார்கள். அவர்களில் இந்திய புலனாய்வுத் துறையான ரோ , குறிப்பிட்டிருந்த , ஆர்மி மொகிதீனும் இருந்தான். மில்ஹானைத் தவிர ஏனைய மூவரும் தற்போது கைதாகி உள்ளனர்.
இக் குழுவில் இருந்து சவுதி விமான நிலையத்தில் ஒளித்து , பின்னர் அங்கு கைதான தற்கொலை தாக்குதல்தாரிதான் அமைச்சர் கபீர் ஹசீமின் தொடர்பாளரான முகமது நஸ்லீமுக்கு , 2019 மார்ச் 09ம் திகதி துப்பாக்கி சூடு நடத்தியவன். அதுவும் சஹரானின் வேலை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அமைச்சர் கபீர் ஹசீமின் ஆதரவாளரான முகமது நஸ்லீம், பயங்கரவாதிகளது தகவல்களை போலீசாருக்கு வழங்கிதோடு, வனாத்தவில்லு முகாம் குறித்த தகவலையும் வழங்கினார் என அவர்களுக்கு தெரிய வர , அவரைக் கொலை செய்ய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தெய்வாதீனமாக காயங்களோடு முகமது நஸ்லீம் ,வைத்திய சிகிச்சையின் பின் உயிர் பிழைக்கிறார்.
கபூர் மாமா , முகமது நஸ்லீமுக்கு சுட்டவர், வவுணதீவு போலீசாரை சுட்டுக் கொன்ற அதே மில்ஹான்தான் என்கிறார். மேலும் முகமது நஸ்லீமை சுட்ட ரிவோல்வர், வவுணதீவு போலீசாரிடமிந்து பறிக்கப்பட்டதுதான் என்கிறார். அந்த ரிவோல்வரும் , போலீஸ்காரர்களைச் சுட்ட , அடுத்த T 56 ஆயுதத்தையும் போலீசார் கைப்பறியுள்ளனர். சாய்ந்தமருது வீட்டில் கொல்லப்பட்ட நிபாஸ் கையிலிருந்தது அந்த T 56 துப்பாக்கிதான் அது.
ஏப்பரல் 21ம் திகதி குண்டு வெடிப்பு நடைபெறும் போது சஹரானின் மைத்துனனான மௌலானா ரிலா மெக்காவில் புனித கடமைக்காக போய் இருந்தான். இரண்டாவது தாக்குதல் அவனது தலைமையிலேயே நடைபெற இருந்தது.ஆனால் அவன் இலங்கையில் நடைபெற்ற எதுவும் தெரியாவன் போல ஏப்பரல் 30ம் திகதி இலங்கை வர இருந்தான்.
அவன் வரும் விமானத்தை எதிர்பார்த்து , அவனை கைது செய்ய , குற்றவியல் தடுப்பு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதட்டத்தோடு நின்றிருந்தார்கள். அவன் அன்றை தினம் வருவதாக இருந்தது. அவனது பெயர் அட்டவனையில் வேறு இடம் பெற்றிருந்தது. சவுதியிலிருந்து வந்த விமானத்தில் அவனது பொதிகள் வந்தன. ஆனால் அவன் வரவில்லை.
கடும் குழப்பத்துக்கள்ளான குற்றப் பிரிவு அதிகாரிகள், உடனடியாக சர்வதேச புலனாய்வுத் துறையினரது உதவியை நாடினார்கள். அப்போதுதான் அவன் , இறுதி நேரத்தில் விமானத்தில் ஏறாமல் ,விமான நிலையத்தில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவனை சவுதி போலீசார் அங்கு கைது செய்கிறார்கள். அங்கு கைதான அவன் இப்போது சவுதி சிறையில் உள்ளான்.
பிளாஸ்டிக் பெரலும், பிளாஸ்டிக் உறையும்

கல்முனையில் கைதாகிய சஹரானின் சாரதி கபூர் மாமா , வனாத்தவில்லு தோட்டத்தில் பாதுகாப்பாக பிளாஸ்டிக் பெரல் ஒன்றில் அடைத்து , ஒரு தொகை ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பது குறித்த தகவலை விசாரணையின் போது தெரிவித்தார்.
கடந்த 2019 தை மாதம் 16ம் திகதி அந்த தோட்டத்தை குற்றவியல் விசாரணைப் பிரிவு முற்றுகையிட்டு சிலரைக் கைது செய்தது. அப்போது கூட இந்த ஆயுதங்கள் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அது அப்போது கண்டு பிடிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் கைதானவர்கள் சில உயர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். அத்தோடு அங்கிருந்த சிலர் தலைமறைவாகியும் இருந்தார்கள்.
கபூர் மாமா கொடுத்த தகவலின் பின் வனாத்தவில்லுவிலிருந்த 80 ஏக்கர் தென்னந் தோட்டத்தின் பின் பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பெரலில் இருந்த அனைத்து ஆயுதங்களையும் குற்ற புலனாய்வு பிரிவினர் எடுத்துக் கொண்டார்கள்.
அங்கே வவுணதீவு போலீசாரைக் கொலை செய்து , அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட ஒரு ரிவோல்வரும் இருந்தது. அதற்கு மேலாக T56 சுடுகலன் ஒன்றும் , மைக்ரோ தர கைத் துப்பாக்கி ஒன்றும் , உள் நாட்டு தயாரிப்பான 6 ரிவோல்வர்களும் , தோட்டக்களும் , ஆயுத உதிரிப் பாகங்களும் இருந்தன.
கல்முனை சாய்ந்தமருது தாக்குதலின் பின் அந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டன. வெடித்துக் கொண்டு இறந்தவர்களது புகைப்படங்களும் அதனிடையே பகிரப்பட்டன.
கொல்லப்பட்ட ஒருவரது பிணத்தின் அருகே கிடந்த பிளாஸ்டிக் உறையொன்றோடு கூடிய ஒரு படம் ஒர் அதிகாரியின் விசேட கவனத்தை ஈர்த்தது. அந்த பிளாஸ்டிக் பையில் உள்ள கிரியுல்ல பகுதி கடையின் முகாமையாளரை அந்த அதிகாரிக்கு தெரிந்திருந்தது. அந்த பிளாஸ்டிக் பை , ஒரு துணிக் கடையின் பெயர் பொறித்த பையாகும். உடனே அவர் அந்தக் கடையின் முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து , விபரத்தை முகாமையாளருக்கு அந்த அதிகாரி விளக்கினார்.
அந்த படத்தைக் கண்ட கடை முகாமையாளர் , உடனடியாக தனது கடையில் பொருத்தியிருந்த சீசீடிவீ கமராவின் முன்னர் பதிவாகியிருந்த காட்சிகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். கடந்த ஏப்ரல் 19ம் திகதி புர்க்கா உடையணிந்த பெண்கள் சிலர் வந்து அவரது கடையில் பொருட்கள் வாங்குவது ஒளிப்பதிவில் பதிவாகியிருந்தது. அந்த பெண்கள் என்ன வாங்கினார்கள் என்பதை அவர் பரீட்சித்து பார்த்தார்.
அவர்கள் 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளை நிற பிளவுஸ்கள் , ஸ்கர்ட்ஸ்கள் , பிரெசியர்கள் ஆகியவை ஒவ்வொன்றும் 9 வீதம் வாங்கியிருப்பது தெரிய வந்தது. அதற்குமேல் 2 குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களும் வாங்கப்பட்டிருந்தன.
அவர்கள் ஒரு வெள்ளை வானில் வந்திருப்பது கூட ஒளிப்பதிவில் காணக் கூடியதாக இருந்தது. அந்த விபரங்களை போலீசாருக்கு உடனடியாக கடை முகாமையாளர் அறிவித்தார். அந்த வெள்ளை உடைகள் குறித்த அவதானம் அதன் பின்னே அதிகாரிகளுக்கு வருகிறது.
அந்த 9 உடைகளில் 7 உடைகள் மாத்திரம் சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் வெடித்து இறந்த வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்த 2 உடைகளுக்கு என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை.
அந்த வெள்ளை உடைகளை இவர்கள் ஏன் வாங்கினார்கள் என்பது குறித்து எல்லோரிடமும் ஒரு கேள்விக்குறி இன்றுவரை புரியா புதிராக உள்ளது. அந்த உடைகளை வாங்கச் சென்ற ஒருவர் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார். அவர் சஹரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவாகும்.
அம்பாறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம் போலீசார் அது குறித்துக் கேட்ட போது , அதை ஏன் வாங்கியது என தனக்கு தெரியாது என பாத்திமா தெரிவித்துள்ளார்.
அதைக் கடையில் வாங்கியது இரண்டாவது தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருந்த புலஸ்த்தி ராஜேந்திரன் எனப்படும் சாரா என பாத்திமா தெரிவித்துள்ளார்.

தான் எதற்கு எனக் கேட்ட போது “முன்னால் தேவைப்படும். அதுதான் வாங்குகிறேன்” என சாரா தெரிவித்ததாக சஹரானின் மனைவி பாத்திமா அப்போது தெரிவித்துள்ளார். இன்று (15.05.2019) பாத்திமா குற்றப் புலனாய்வு துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிலவேளை அது குறித்த மேலதிக தகவல்களை அவர் இனிச் சொல்லலாம்?

கருத்து மோதல் – கனதியை குறைத்தது
இதுவரை கைதான அனைவரையும் விசாரித்ததில் ஒரே நாளில் , ஒரே நேரத்தில் , இலங்கையின் 9 மாகாணங்களிலும் பாரிய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு திட்டம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக வெடி பொருட்கள் அடங்கிய குண்டுகளை நிரப்பிக் கொண்டு செல்லக் கூடிய, தோளில் சுமக்கும் 20 backpack பைகளை , பத்தரைமுல்லையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்கியுள்ளார்கள். 15 முதல் 20 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடிய backpack bagகளை அந்தக் கடையில் தேர்வு செய்து எடுத்துள்ளார்கள்.
அந்தப் backpack bag பைகள் ,தற்கொலைதாரிகள் வெடித்துச் சிதறக் கொண்டு செல்லும் குண்டுகளை நிரப்பி , நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு கொண்டு செல்வதற்கேயாகும். அதோடு வாகனங்களில் பொருத்தும் குண்டுகளையும் , நாடு முழுவதும் வெடிக்க வைக்க வேண்டும் என்பது , அத்தாக்குதலலோடு இணைந்த தாக்குதல் திட்டமாகும். ஏப்ரல் 16ம் திகதி இரவு வேளையில் காத்தான்குடியில் வைத்து எதிர்பாராதவிதமாக ஒரு வாகன குண்டு வெடிக்கிறது. அது ஒரு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டாகும்.
இன்னொரு குண்டு வான் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்தது. கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டு , குண்டு செயலிழக்க வைக்கும் படையினரால், செயலிழக்க வைத்து வெடிக்க வைத்தது அந்த வாகனக் குண்டேயாகும். தவிர மோட்டார் சைக்கிள்கள், லொறிகள் மற்றும் வான்களில் நிரப்பிய குண்டுகளும் கொண்ட தாக்குதல் திட்டமும் , மனித வெடி குண்டு தாக்குதல் திட்டமும் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து முரண்பாட்டால் தடைப்பட்டுவிடுகிறது.
முதலாவது தாக்குதலில் மனித குண்டாகப் போவதற்கு, சஹரானின் பெயர் இருக்கவில்லை. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவால் ஏற்பட்ட ஆள் பற்றாக் குறையால் , சஹரான் சங்கிரிலா ஹோட்டல் தாக்குதலுக்காக தன்னைத்தானே வெடித்துக் கொள்வதெனும் முடிவுக்கு இறுதி நேரத்தில் வருகிறான். இல்லாது போயிருந்தால் ஏனைய தாக்குதல்களையும் நெறிப்படுத்தி இதைவிட ஒரு பேரழிவை ஏற்படுத்தியருப்பான்.
இறுதித் தருணத்தில் அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாட்டினால் , அவர்களது தலைமையை நவ்பர் மௌலவி பறித்துக் கொள்கிறார். குற்றப் புலனாய்வு துறையினரது தகவலின்படி அவர் நாரம்மல பகுதி வாசியாவார். அவரும் தற்போது கைதாகியுள்ளார்.
நவ்பர் மௌலவி மனித குண்டு வெடிப்புக்கு எதிரான கருத்துகளை முன் வைத்து, சஹரானின் தலைமையை தன் வசப்படுத்திக் கொண்டுள்ளார். அல்ஹாவின் உபதேசங்களில் தன்னை அழித்துக் கொண்டு இன்னோருவரைக் கொல்வதோ அல்லது தற்கொலை செய்து கொள்வதோ குறித்து குரானில் இல்லையென நவ்பர் மௌலவியின் கருத்து முரண்பாட்டினால் அவர்களுக்குள் பிளவு தோன்றியுள்ளது.
தவிர சஹரான் தனது குடும்பத்துக்கு மேலதிக சலுகைகளை வழங்கியமை, தற்கொலைதாரிகளாக இருந்தோரில் சிலரிடம் மனக் கசப்புகளை உருவாக்கியுள்ளது.
சஹரானோடு தனக்கு எந்தவொரு உறவும் இல்லையென சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த சஹரானின் சகோதிரியான முகமது ஹசீம் மதானியாவுக்கு சஹரான் அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளான்.
இறுதியாக மதானியாவை கொழும்புக்கு அழைத்து 20 லட்சம் ரூபாய் பணத்தை செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு சஹரான் கொடுத்திருக்கிறான். அப்படி சஹரானின் குடும்பத்தினருக்கு அமைப்பின் பணத்தை அடிக்கடி வாரி வழங்கி வந்தமையும் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போயுள்ளது. அது நவ்பர் மௌலவி தலைமைத்துவத்தை பொறுப்பேற்றதாக சொன்னதும் பூகம்பமாக வெடித்துள்ளது.
நவ்பர் மௌலவி , தனது ஆதரவானவர்களை தனியாக அழைத்து , என்டேறுமுல்லையிலுள்ள ஒரு அமைச்சரின் சகோதரிக்கு சொந்தமான வீட்டில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். அந்த வீட்டை அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்திருந்துள்ளார்கள்.
அந்த வாடகை வீட்டில் , மாவனல்லை புத்தர் சிலைகளை சேதமாக்கியவரும் , வனாத்திவில்லு பயிற்சி முகாம் தொடர்பாக தேடப்பட்ட நபருமான , முகமது இவுஹயிம் சாதிக் அப்துல் ஹக் , அவனது மனைவி பாத்திமா லதீபா மற்றும் அவனது இளைய சகோதரனான முகமது இவுஹயிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகிய மூவரும் தங்கியிருந்துள்ளார்கள்.
தவிர தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கம்பளை பாடசாலை ஆசிரியரான முகமது இர்சாத் , மாவனல்ல வாசியான ரனீஸ் மற்றும் குருநாகல் வாசியான முகமது நவ்பர் ஆகியோர் இடையிடையே அங்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர்.
சஹரான் இவர்கள் அனைவரையும் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்த இருந்துள்ளான். அவர்களுடன் சிரியாவில் ISIS பயிற்சி பெற்றவர்களும் இருந்ததால் , தனது குறிக்கோளை பிரச்சனையில்லாமல் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் சஹரானிடம் கடைசிவரை இருந்துள்ளது. ஆனால் அங்கிருந்த அனைவரும் மனித வெடி குண்டுகளாக மாறத் தயாராக இருந்திருக்கவில்லை. நவ்பர் மௌலவியோடு , சஹரானை எதிர்த்தோர் இணைந்ததனால் , உயிர்த்தெழுதல் ஞாயிறு தாக்குதலுக்கு தன்னோடு இருப்பவர்களை மட்டும் பயன்படத்த வேண்டிய நிலைக்கு சஹரான் தள்ளப்பட்டுள்ளான்.
ஏப்பரல் 21ம் திகதி உயிர்த்தெழுதல் ஞாயிறு தாக்குதல் நடக்கிறது. அத் தாக்குதலை அறிந்ததும் அச்சத்துக்குள்ளாகும் என்டேறுமுல்லை வீட்டில் இருந்தோர் , அன்றிரவே அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அங்கு தங்கியிருந்த முகமது இர்சாட் உல்பனையில் உள்ள அவரது வீட்டுக்கே போயுள்ளார். முகமது ரனீஸ் மற்றும் முகமது நவ்பர் மட்டக்களப்புக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்கள். அப்படிச் செல்ல முயல்கையில் , பாதி வழியில் தம்புள்ளை போலீசாரிடம் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.
சாதிக் தனது மனைவி மற்றும் சகோதரனோடு நுவரெலியாவுக்கு தப்பிச் செல்கிறான். அவர்கள் தலை முடியை ஒட்ட வெட்டி , தாடி இல்லாமல் , சிங்களவர்கள் போல தெரியும் விதத்தில் , தெருவண் சரணய் என பௌத்த மத ஸ்டிக்கர் ஒட்டிய வான் ஒன்றில் நாட்டின் பல பாகங்களுக்கும் செய்வதறியாது சுற்றித் திரிந்துள்ளார்கள். இறுதியாக தனது மனைவியை மறைந்து வைத்திருக்க வழியே இல்லாது போனதால் , மாவனல்லையில் இறக்கி விட்டுச் செல்கிறான். அதோடு அவளை குற்றவியல் தடுப்பு பிரிவு கைது செய்கிறது.
சாதிக் மற்றும் சாஹிட் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு பின் , அவர்களது உறவினர் ஒருவரது கம்பளையிலுள்ள பாதணி விற்கும் கடையொன்றுக்குள் ஒழித்திருக்கும் போது சிக்கினார்கள்.
“சஹரான் இப்படி ஒரு வேலை செய்யப் போகிறார் என நாங்கள் அறிந்திருக்கவில்லை. அது தெரிந்ததும் நாங்கள் பயந்தோம். அதனால் அதை எதிர்த்தோம். எங்கள் மதத்தில் தற்கொலை செய்து கொள்ளச் சொல்லிச் சொல்லவே இல்லை” என விசாரணையின் போது சாதிக் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
தாக்குதலுக்காக 5 வீடுகளும் – மௌனித்துள்ள பயங்கரவாதிகளும்

21ம் திகதி ஏப்ரல் தாக்குதலின் தயாரிப்பு வேலைகளுக்காக என்டேறுமுல்லையிலுள்ள அமைச்சர் ஒருவரின் சகோதரியின் வீட்டைத் தவிர , மேலும் 4 வீடுகளை இவர்கள் தாக்குதல் பணிகளுக்காக பாவித்துள்ளார்கள்.
வெடி பொருட்களை மறைத்து வைத்திருந்த நீர்கொழும்பு ,கட்டானை டேவிட் பெரேரா வீதியில் உள்ள ஒரு வீடு , குண்டுகளை தயார் செய்த பாணதுறை சரிக்கமுல்லை எனுமிடத்தில் உள்ள ஒரு வீடு , தவிர கல்கீசை பன்சல வீதியில் உள்ள அடுக்கு மாடியில் உள்ள ஒரு வீடு ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து மாறி மாறி பாவித்து வந்துள்ளார்கள் .
கல்கீசை மாடி வீட்டில்தான் ,சஹரான் பல காலமாக மறைந்து வாழ்ந்துள்ளான். அதைத் தவிர மற்ற வீடுகளுக்கும் இடையிடையே போய் தங்கி வந்துள்ளான்.
குண்டுகளை மறைத்து வைக்க பாவிக்கப்பட்ட வீடு , தெமட்டகொடை இப்ராகிமின் வீடாகும். குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்த போது அங்கு வசித்த , சங்கிரிலா ஹோட்டல் தற்கொலைதாரியான முகமது இப்ராகிம் இல்ஹாமின் மனைவியான பாத்திமா இல்ஹாம் கூட , தற்கொலைதாரிதான் எனத் தெரிய வந்துள்ளது. அவள் இரண்டாவது தொடர் தாக்குதலுக்காக தயாரான நிலையிலேயே இருந்துள்ளார்.
ஆனால் சங்கிரிலா ஹோட்டல் தாக்குதலின் பின் கிடைக்கும் இல்ஹாமின் தேசிய அடையாள அட்டையை வைத்து , தெமட்டைகொடை வீட்டை போலீசார் சுற்றி வளைத்ததால் பாத்திமாவின் நோக்கம் திசை மாறிவிடுகிறது. போலீசார் வீட்டை சுற்றி வளைத்து உட்செல்ல முற்படும் போது கற்பினியான அவள் , தனது மூன்று குழந்தைகளோடு சேர்த்து தன்னை வெடிக்க வைத்துக் கொள்கிறாள். வீட்டுக்கு நுழைந்த 3 போலீசாரும் அவர்களோடு உயிரிழக்கின்றனர். அதே சமயம் இன்னொரு குண்டும் வீட்டுக்குள்ளிருந்து வெடித்துள்ளது. அது எப்படி வெடித்தது , யார் வெடிக்க வைத்தது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
இதுவரை நடந்த விசாரணைகளில் , சஹரான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத்தின் அமைப்பு ,நாடு முழுவதும் பரவியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. அதற்காக வெளிநாடுகளிலிருந்து கோடிக் கணக்கான பணம் , கடைசி காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்துள்ளது. அதைத் தவிர இந்த நாட்டு பெரும் வியாபாரிகள் கூட பண உதவிகளை தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். இதில் அதிகமாக நிதி வழங்கியவர்கள் , தெமட்டகொடை தொழிலதிபரான இப்ராகிமின் குடும்பமாகும்.
இவர்களைத் தவிர நகைக் கடை வைத்திருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் , இன்னும் சில தொழிலதிபர்கள் குறித்த விபரங்கள் குற்றப் புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ளன.
கையில் ஒரு சதம் கூட பணமில்லாமல் ஆட்டோவில் திரிந்த சஹரானுக்கு , தெமட்டகொடை இப்ராகிம்தான் முதன் முதலாக வான் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
காத்தான்குடியில் பலகையிலான கொட்டகையாக இருந்த சஹரானின் பள்ளிவாசலை திருத்திக் கட்டி எழுப்புவதற்குக் கூட ஆரம்பத்தில் இப்ராகிம்தான் பணம் கொடுத்து உதவியுள்ளார். அது பின்னர் அழகிய ஒரு கட்டிடமாக மாறியது. ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின் , பாதுகாப்பு தரப்பு, சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் என அட்டவனை இட்டிருந்த 20 வாகனங்களையும் ,இப்ராகிம்தான் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இப்ராகிம் கொடுத்த பணத்தில்தான், சஹரான் , 30 – 40 ஏக்கர் காணிகளை விவசாயம் செய்யவென குத்தகைக்கு எடுத்து , அவற்றை பயிற்சி முகாம்களாக பாவித்து வந்துள்ளான். வனாத்தவில்லுவில் அகப்பட்டதும் அப்படியான ஒரு தோட்டக் காணியாகும். நுவரெலியா அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அப்படியான காணிகளோடான பயிற்சி முகாம்கள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய பயங்கரவாதிகளில் அநேகர் தற்போது கைதாகியிருந்தாலும் , இன்னும் பலர் மௌன போராளிகளாக ஒன்றும் அறியாதவர்கள் போல பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை தேடிக் கண்டு பிடிப்பது , தொடர்கிறது ……

நாம் நினைப்பது போல சஹரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத் மட்டும்தான் அல்ஹாவை வணங்காதவர்களை கொலை செய்ய வேண்டும் என நாம் நினைத்தால் அது தவறான எண்ணமாகும். இவர்களை விட படு பயங்கரமாக உணர்ச்சிப் போதனைகளை செய்தோர் வேறு பல இஸ்லாமிய அமைப்புகளில் இருக்கிறார்கள். அவர்கள் செய்த பிரசங்கங்கள் உள்ள வீடியோக்களையும் , ஆவணங்களையும் அவர்கள் அழித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது ஆயுதம் தூக்கவில்லையே தவிர “அல்ஹாவை ஏற்காதோரை கொல்ல வேண்டும் ” எனும் தீவிர எண்ணங்களை பரப்பியே வந்துள்ளார்கள். இப்போது அவர்களும் மௌனித்தது மாதிரி உள்ளார்கள். அந்த மௌனம் கூட பயங்கரமானதே!

– ஜீவன்
( இந்த கட்டுரை 2019.மே 13 முதல்  2019.மே 18 வரை முகப்புத்தகத்தில் தொடராக வெளியானதாகும்)

Leave A Reply

Your email address will not be published.