ஈஸ்டர் தாக்குதல்: உண்மை வெளிவர இடமளிக்க வேண்டும்! – ஹக்கீம் வலியுறுத்து.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தேர்தல் வெற்றி ஒன்றை இலக்குவைத்து, நீண்டகாலமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது வெளிப்பட்டுள்ள சம்பவங்கள் மூலம் ஊகித்துக்கொள்ள முடிகின்றது. அத்துடன் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னாள் பிரதானிகள் வெளியில் வந்து உண்மையைத் தெரிவித்தால் இது இன்னும் கடுமையான போக்குக்குச் செல்ல இடமிருக்கின்றது. அதற்கும் நாங்கள் இடமளிக்க வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் தகவல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் புதிய தகவல்கள் மூலம் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த வெளிப்படுத்தல்கள் தொடர்பில் அரசு உத்தியோகபூர்வமாகத் தலையிடாமல், குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி இருப்பவர்கள் அது தொடர்பில் தங்களின் நியாயத்தைத் தெரிவிப்பதே நல்லது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

அத்துடன் சனல் 4 வெளிப்படுத்தி இருக்கும் தகவல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசு தயார் எனவும், அதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் அரசின் முக்கியமான நிறுவனங்களுக்குக் குற்றச்சாட்டு தெரிவிப்பதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது என்ற வகையில் மேலும் ஒரு அமைச்சர் எச்சரிக்கும் வகையில் தெரிவித்திருந்தார். அரசில் சிலர் உண்மை வெளிவருவதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர் என்பது இதனூடாகப் புலனாகின்றது.

நாடு தொடர்பில் எங்களுக்கும் கரிசனை இருக்கின்றது. என்றாலும் தேச அபிமானிகள் என்ற போர்வையில் மறைந்து அப்பாவி மக்களைக் கொடூரமான முறையில் கொலை செய்த திரிபோலி குண்டர்களாகச் செயற்பட்ட அவர்களுக்கு ஆயுதக் குழுவொன்றுக்குத் தலைமைத்துவம் வழங்கிய அரசின் தற்போதைய அமைச்சர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பதும் தற்போது வெளிப்பட்டிருக்கின்றது.

இதன் உண்மையை நாங்கள் தேடவேண்டும். யாரும் இதனை மறைக்க முடியாது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவது மாத்திரமல்லாது, இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களின் உள்ளம் அமைதியடையச் செய்ய வேண்டும்.

அத்துடன் இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகப் பொய் பிரசாரங்களை மேற்கொண்ட குண்டர்கள், அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் நோக்கத்துக்காகச் செயற்பட்டவர்கள் தொடர்பான உண்மைகளை நாங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

இதன் மூலம் நாட்டின் முக்கிய நிறுவனங்களைப் பலவீனப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிப்பதாக அர்த்தம் கற்பிக்க முடியாது. என்றாலும் சர்வதேசத்துக்கு முன்னால் உண்மையை வெளிப்படுத்தும் கடப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது. அதேபோன்று இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றச்சாட்டு தெரிவிக்கும்போது நாங்கள் மிகவும் பொறுப்புடனும் நாட்டின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தேர்தல் வெற்றி ஒன்றை இலக்குவைத்து, நீண்டகாலமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது வெளிப்பட்டுள்ள சம்பவங்கள் மூலம் ஊகித்துக்கொள்ள முடிகின்றது. அத்துடன் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னாள் அதிகாரிகள் வெளியில் வந்து உண்மையைத் தெரிவித்தால் இது இன்னும் கடுமையான போக்குக்குச் செல்ல இடமிருக்கின்றது.

அதற்கும் நாங்கள் இடமளிக்கவேண்டும். சட்டத்தை மதித்துச் செயற்பட்ட பல அதிகாரிகள் உண்மையைத் தெரிவிப்பதற்கு முன்வர இருக்கின்றார்கள் என்பதையும் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.