ஆபிரிக்க தேசங்களில் தொடரும் ஆட்சிக் கவிழ்ப்புகள் : சுவிசிலிருந்து சண் தவராஜா

மத்திய ஆபிரிக்க நாடான கபூனில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த அரசுத் தலைவர் தேர்தலில் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் – தேர்தல் முடிவுகள் மோசடியானவை என எதிர்க் கட்சிகள் தரப்பில் இருந்தும், பொதுமக்கள் மத்தியில் இருந்தும் குரல்கள் எழுந்த நிலையில் – இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.


தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அரசுத் தலைவர் ஒமர் பொங்கோ உள்ளிட்டவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ ஆட்சியின் தலைவராக ஜெனரல் பிரிஸ் ஒலிகுயி இங்குயேமா அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுக் காவல் படையின் தலைவராகப் பணியாற்றிய அவரைத் தோளில் தூக்கியவாறு படையினர் தலைநகர் லிபர்வில்லில் முன்னதாகப் பவனி வந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமன்றி பொங்கோ குடும்பத்தின் நீண்ட கால ஆட்சி அகற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பொதுமக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிகின்றது.


அயல் நாடான நைஜரில் ஐந்து வாரங்களுக்கு முன்னரேயே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்த நிலையில் கபூனிலும் இராணுவம் ஆட்சியைப் பிடித்திருப்பது மீண்டும் இராணுவ ஆட்சியை நோக்கி ஆபிரிக்கக் கண்டம் செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அது மாத்திரமன்றி, கனிம வளங்களை அதிகளவில் கொண்ட ஆபிரிக்கக் கண்டத்தில் வறுமையில் வாழும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களின் குரலை மதிக்காத ஆட்சியாளர்களின் போக்குதான் இத்தகைய இராணுவ ஆட்சிக்கு உந்துதலா என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

அடி முதல் நுனி வரை ஊழல் கலாசாரத்தைக் கொண்டுள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் மக்கள் விரோத ஆட்சிகளே பெரிதும் நடைபெற்று வருகின்றன. சாமானிய மக்களின் குரல்கள் புறந்தள்ளப்படும் நிலையில் ஆட்சியாளர்களும், அவர்களது அடிவருடிகளும் மாத்திரமே அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் நிலை அங்கு உள்ளது. இத்தகைய ஆட்சியாளர்கள் பதவியில் இருப்பதையே மேற்குலக நாடுகள், குறிப்பாக முன்னாள் குடியேற்ற நாடுகள் விரும்புகின்றன. அதன் மூலம் அந்த நாட்டின் கனிமவளங்களைத் தங்கு தடையின்றிச் சுரண்டும் வாய்ப்பை அவை பயன்படுத்தி வருகின்றன.

கபூனும் இது விடயத்தின் விதிவிலக்கல்ல. 23 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டின் 90 விழுக்காடு செல்வமும் 20 வீதமானோரின் வசமே உள்ளது. ஏனைய மக்கள் தினமும் 2 டொலருக்கும் குறைவான வருமானத்திலேயே வாழவேண்டிய நிலை உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஆண்டில் 21.47 விழுக்காடாக இருந்தது.

தினமும் 1,81,000 பீப்பா எண்ணையை உற்பத்தி செய்யும் கபூன் உப சகாரா பிராந்தியத்தில் எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. அது மாத்திரமன்றி உலோக உற்பத்திக்குத் தேவையான மங்கனீஸ் என்ற கனிம வளத்தையும் அதிகம் கொண்டுள்ள நாடாக உள்ளது. இருந்தும் அந்த நாட்டுக் குடிமக்களில் மூன்றில் இரண்டு விழுக்காட்டினர் வறுமைக் கோட்டின் கீழே வாழும் நிலையே தொடர்கிறது.


ஆபிரிக்காவில் உள்ள பிரான்சின் முன்னாள் குடியேற்ற நாடுகளில் அடுத்தடுத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் போக்கு தொடர்கிறது. 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆபிரிக்கக் கண்டத்தில் 8 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்றுள்ளன. மாலி மற்றும் புர்க்கினா பாசோ ஆகிய நாடுகளில் தலா இரண்டு தடவையும், நைஜர், கினி மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் தலா ஒவ்வொரு தடவையுமாக இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்றுள்ளன. இந்நாடுகளுள் சூடான் தவிர்ந்த ஏனையவை பிரான்சின் முன்னாள் குடியேற்ற நாடுகளாகும்.

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விமர்சனங்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ள முன்னாள் குடியேற்ற நாடுகளில் பிரான்சின் அதீத தலையீடு தொடர்பில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு உள்ளன. அதேவேளை இந்த நாடுகளில் கனிம வளத் துறையில் செயற்படும் பிரான்சின் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வும் அதிகரித்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள பிரான்சின் ஆயுதப் படையினரை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகின்றன.


தேர்தல் ஜனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆட்சியை பலாத்காரமாக அகற்றுவது ஜனநாயக விரோதமான செயல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் ஆட்சிக் கதிரையில் இருந்து கொண்டு ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்ட வேளைகளில், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட வேளைகளில் எழாத கண்டனக் குரல்கள், ஆட்சியில் இருந்து அவர்கள் அகற்றப்படும் வேளைகளில் மாத்திரம் உலக நாடுகளிடம் இருந்தும் உலக மன்றங்களிலும் இருந்து வருமானால் அவர்கள் யாருடைய நலனுக்காகப் பேசுகிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

கபூன் விடயத்தில் கூட பெரும்பாலான நாடுகள் ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்துள்ளன. ஆபிரிக்க ஒன்றியத்தில் இருந்து கபூன் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் இந்த வெற்று அறிக்கைகளும், கண்டனங்களும் கண்டு கொள்ளப்படவே இல்லை. ஏலவே அட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற நைஜர் நாட்டின் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார மன்றம் அந்த நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொண்டு தற்போது பதவியில் உள்ள இராணுவ ஆட்சியைப் பதவி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிராந்தியத்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் போக்கை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் சிக்கல் உள்ளது. பெருமளவிலான கனிம வளங்களைக் கொண்டுள்ள நாடுகளில் வறுமையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா அல்லது சட்ட விரோதமான முறையில் அதிகாரத்தைப் பெற்றார்களா என்பதை விடப் பாரிய பிரச்சனை தமது வறுமை நிலை நீங்க ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள், செய்கிறார்கள் என்பதுவே. இந்தக் கேள்விக்கான சரியான விடையைத் தெரிந்து கொள்ள அவர்கள் இன்னமும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கலாம். ஆனால், முன்னர் இருந்த ஆட்சியாளர்களே பரவாயில்லை என மக்கள் நினைக்கும் நிலைமை உருவாகாமல் இருப்பதே நல்லது.

மக்களின் உண்மையான மனநிலையைப் புரிந்து கொண்டு புதிய ஆட்சியாளர்கள் தமது நாடுகளை வளமான எதிர்காலம் நோக்கி நடத்திச் செல்வார்களாயின் அவர்கள் மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள். மாறாக, முன்னைய ஆட்சியாளர்களைப் போலவே ஊழல், பக்கச் சார்பு, மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் தொடர்பில் பாராமுகம் என்ற வழியில் நடக்க முனைவார்களாயின் அவர்களும் ஒரு நாள் மக்கள் எழுச்சி மூலம் தூக்கியெறிப்படும் நிலையே உருவாகும். அதற்கான எடுத்துக்காட்டுகள் வரலாறு நெடுகிலும் உலகில் பல உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.