தடையில்லாப் பொருளாதாரப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்.

உலகின் தடையில்லாப் பொருளாதாரமாக அரை நூற்றாண்டாக ஹாங்காங் தக்கவைத்திருந்த தகுதியை சிங்கப்பூர் முதல்முறையாகப் பெற்றுள்ளது.

உலகப் பொருளாதார சுதந்திரக் குறியீடு 1970ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து, ஹாங்காங் முதல்முறையாக இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது.

ஃபிரேசர் இன்ஸ்டிடியூட் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இந்த அறிக்கை, 2021ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே, எதிர்வரும் ஆண்டுகளில் ஹாங்காங்கின் நிலை மேலும் இறங்க வாய்ப்பிருப்பதாக அமைப்பு குறிப்பிட்டது.

பொருளியல் சுதந்திரத்திற்கும் குடிமை, அரசியல் சுதந்திரத்திற்கும் இடையிலான தொடர்பை ஹாங்காங்கின் நிலைமாற்றம் எடுத்துக்காட்டுவதாக அமைப்பைச் சேர்ந்த திரு மேத்யூ மிட்ச்சல் அறிக்கையில் கூறினார்.

உலகின் தடையில்லாப் பொருளாதாரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும் ஹாங்காங் இரண்டாம் இடத்திலும் இருக்க, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகியவை அடுத்த மூன்று இடங்களைப் பிடித்தன.

இந்நிலையில், ஹாங்காங் நீதித்துறையின் சுதந்திரம் குறைந்து வருவதாக அறிக்கை குறிப்பிட்டிருப்பது ‘முற்றிலும் ஆதாரமற்றது’ என்று ஹாங்காங் அரசாங்கம் கூறியுள்ளது.

ஹாங்காங் நீதிமன்றங்கள் சீனாவிலிருந்து வேறுபட்டவை. ஆனால், சீன அதிபர் ஸி ஜின்பிங் 2020 ஜூன் மாதம் ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நிலைநாட்டியதைத் தொடர்ந்து, ஹாங்காங் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.