சிங்களப் பாடசாலைகளைத் தமிழ்ப் பாடசாலைகளுடன் இணைக்க இடமளியேன்! – மனோ திட்டவட்டம்.

“கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்களப் பாடசாலைகளை அருகாமை உள்ள தமிழ்ப் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் சிலர் முன்னெடுக்க முயல்கிறார்கள். எம்மிடம் எஞ்சி இருக்கும் கல்வி வாய்ப்புக்களையும் பிடுங்க முயலும் இத்தகைய போலி நல்லிணக்கத்துக்கு கொழும்பு மாவட்ட எம்.பியான நான் ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டேன்.’

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பு கல்வி வலயத்தில் வடகொழும்பு கோட்டத்தில், கலைமகள் தமிழ் வித்தியாலயத்துடன் அருகாமையில் உள்ள சிங்கள மொழி பாடசாலையை இணைக்கும் இரகசிய முயற்சி தொடர்பில் மனோ எம்.பி, கொழும்பு கல்வி வலயப் பணிப்பாளர் தேவபந்துவுக்கு தொலைபேசியில் அறிவித்து விட்டு, எழுத்து மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் இந்த முயற்சியை ஒருசில மதத்தலைவர்கள் செய்ய முயல்கிறார்கள். ஒரு கீழ்மட்ட அரசியல்வாதியும் இதில் தொடர்புற்றுள்ளார்.

கொழும்பு மாவட்ட எம்.பியான எனக்குத் தெரியாமல் செய்யப்படும் இந்த இரகசிய முயற்சி பற்றி கலைமகள் தமிழ் பாடசாலை பெற்றோர்கள் எனக்குப் புகார் செய்துள்ளார்கள்.

ஆகவே என்னிடம் விளையாட வேண்டாம். நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.

மாவட்டங்களின் கல்வி நிர்வாக சீர்திருத்தங்களுக்கு எனது நண்பர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் முயற்சிகளுக்கு நான் ஒத்துழைப்பு வழங்குகின்றேன்.

அவை பற்றி நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சு ஆலோசனை குழு, கல்வி மேற்பார்வை குழு, கொழும்பு மாவட்ட மற்றும் பிரிவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நாம் பார்த்துக்கொள்கின்றோம்.

அதிகாரமும், மக்கள் ஆணையும் இல்லாத நபர்களின் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு இடம் கொடாதீர்கள்.

உண்மையான நல்லிணக்கம் உருவாக, வளர்ச்சியடைந்த கொழும்பு பாடசாலைகளான ரோயல் கல்லூரி, இசிபதன கல்லூரி, டீ.எஸ். சேனநாயக்க கல்லூரி ஆகியவற்றில் திட்டமிட்டு குறைக்கப்படும் தமிழ் வகுப்புகளைக் அதிகரியுங்கள்.

வளர்ச்சியடைந்த ஆனந்தா கல்லூரி, நாலந்தா கல்லூரி, விசாகா கல்லூரி ஆகியவற்றில் தமிழ் மொழி பிரிவுகளை ஆரம்பியுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் தமிழ் மொழி மூல பிள்ளைகளுக்கு வளர்சியடைந்த நல்ல கல்வி வாய்ப்புகளை வழங்குங்கள்.

இதைச் செய்யாமல், எம்மிடம் எஞ்சி இருக்கும் கல்வி வாய்ப்புகளையும் பிடுங்க முயலும் இத்தகைய போலி நல்லிணக்கத்துக்கு  கொழும்பு மாவட்ட எம்.பியான இந்த மனோ கணேசன் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.”

Leave A Reply

Your email address will not be published.