பிறந்து 4 நாள் சிசுவிடமிருந்து உடலுறுப்புகள் தானம்

அரிதிலும் அரிதான நிகழ்வாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன் உடலுறுப்புகள் தானம்பெறப்பட்டுள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் உடலுறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெற்று வரும் பல குழந்தைகளுக்கு இதன் மூலம் மறுவாழ்வு கிடைக்கவிருக்கிறது.

மிகச் சிறிய மென்மையான அந்த உடலில் இருந்து, இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள், கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட மிக முக்கிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

இதில், சிறுநீரகங்கள் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 மாதக் குழந்தைக்கும், புது தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மாதக் குழந்தைக்கு கல்லீரலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவடைந்த குழந்தையின் மிகக் குறுகிய வாழ்க்கைப் பயணமானது அக்டோபர் 13ஆம் தேதிதான் தொடங்கியது. உலகை அன்றுதான் அது அடைந்திருந்தது. சூரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த அந்தக் குந்தை பிறந்தது முதல் எந்த அசைவையும் காட்டவில்லை. அழுகையும்ட இல்லை. உடனடியாக குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு சிகிச்சைகள் அளித்தும், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், குழந்தை மூளைச்சாவடைந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

பிறந்த 4 நாள்களில் குழந்தை மூளைச்சாவடைந்துவிட்டதாக குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறினர். இதனால் கதறிய பெற்றோர், குழந்தையின் உடலுறுப்புகள் மூலம் பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என்பதை அறிந்து அதற்கு ஒப்புக் கொண்டனர். பல குழந்தைகளின் பெற்றோருக்கு இது தீபாவளிப் பரிசாக இருக்கும் என்று அவர்கள் தங்களது குழந்தையின் உடலுறுப்புகளை தானமளிக்க ஒப்புக்கொண்டனர்.

முதலில், அந்தக் குழந்தையின் பாட்டிதான், இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்து குடும்பத்தில் அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே மிகச் சிறிய குழந்தையிடமிருந்து உடலுறுப்புகள் தானம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.