37 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை மூன்று படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களைத் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அதேவேளை, நேற்று மாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இரண்டு படகுகளுடன் கைது செய்த கடற்படையினர் அவர்களை மயிலிட்டித் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இம்மாதம் 14ஆம் திகதியில் இருந்து நேற்று (28) மாலை வரை எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 64 மீனவர்கள் பத்து படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 64 இந்திய மீனவர்களும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரும் தமிழகத்தின் அழுத்தங்களும் இந்திய மத்திய அரசு மீது அதிகரித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.