ஹமாஸ் வளர்ந்த கதை

1987 டிசம்பர் 10-ம் தேதி ஹமாஸ் உருவானது. என்றாலும், அதற்கு ஹமாஸ் என்று பெயர் வைக்கப்பட்டது 1988 ஜனவரியில்தான்!
Ḥarakat al-Muqāwamah al-ʾIslāmiyyah என்பதன் சுருக்கமே ஹமாஸ்.

இஸ்ரேலில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது ஹமாஸ் நிகழ்த்திய சனிக்கிழமை கோரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டன.

“பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வமான விருப்பங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால், ஹமாஸ் அமைப்பு அந்த மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் பிரதிநிதியாக இல்லை. தீவிரவாதம் மற்றும் ரத்த வெள்ளத்தைத் தவிர வேறு எதையும் பாலஸ்தீன மக்களுக்கு ஹமாஸ் கொடுக்கவில்லை.”  என்றது அந்த அறிக்கை.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், கனடா போன்ற பல நாடுகள் ஹமாஸை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. நியூசிலாந்து போன்ற ஒரு சில நாடுகள், ஹமாஸின் ராணுவப் பிரிவை மட்டும் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்தியா இதுவரை ஹமாஸைத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கவில்லை. போலவே, ஐ.நா சபையும் இதை பயங்கரவாத அமைப்பாகக் குறிப்பிடவில்லை.

ஹமாஸ்

ஹமாஸ்

இஸ்‌ரேல் ஒரு நாடாக உருவெடுத்து பாலஸ்தீனர்களை பல பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தியபோது, அகதிகளாக பல நாடுகளுக்கு அவர்கள் போனார்கள். அப்படி எகிப்து சென்ற அகதிகள், அங்கிருந்த Muslim Brotherhood அமைப்பின் செயல்பாடுகளைக் கவனித்தனர். அதேபோல ஒரு கிளையை பாலஸ்தீனர்களுக்காக நிறுவினர். 1967-ம் ஆண்டு மேற்குக்கரை மற்றும் காஸாவை இஸ்‌ரேல் ஆக்கிரமித்தது. அதைத் தொடர்ந்து காஸாவில் al-Mujama al-Islamiya என்ற பெயரில் 1973-ம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. எகிப்தின் Muslim Brotherhood அமைப்புடன் இதற்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. (பிற்காலத்தில் எகிப்து அரசுக்கு எதிராக Muslim Brotherhood கிளர்ச்சியில் ஈடுபட்டது. அப்போது இத்துடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு, ஹமாஸ் அமைப்பு எகிப்து அரசுடன் இணக்கமாக ஆனது தனிக்கதை!)

al-Mujama al-Islamiya ஆரம்பத்தில் சேவை அமைப்பாகவே இருந்தது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆரம்பித்து பாலஸ்தீன மக்களுக்கு உதவிகள் செய்தது. இதை ஆரம்பித்தவர், ஷேக் அகமது யாசின் (Sheikh Ahmed Yassin) என்ற மதகுரு. இஸ்ரேல் உருவானபிறகு அல்-ஜுரா பகுதியிலிருந்து அகதியாக காஸாவுக்கு அடைக்கலம் தேடி வந்தவர் யாசின். கல்லூரி காலத்தில் முதுகில் அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டதால், காலம் முழுக்க வீல்சேரில் முடங்கும் சூழலுக்கு ஆளானவர். கண் பார்வையும் அவ்வளவாகத் தெரியாது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லவோ, சாப்பிடவோ, படிக்கவோ என்று எல்லாவற்றுக்கும் அடுத்தவர்கள் உதவி தேவை. அப்படிப்பட்ட சூழலிலும் அவர் இளைஞர்களை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். கணிசமான பாலஸ்தீன இளைஞர்கள் அவர் பின்னால் நின்றனர். அவர்கள்தான் அவரையும் பராமரித்தனர், al-Mujama al-Islamiya அமைப்பின் சேவைகளையும் பார்த்துக்கொண்டனர்.

ஷேக் அகமது யாசின் (Sheikh Ahmed Yassin)

ஷேக் அகமது யாசின் (Sheikh Ahmed Yassin)
Adel Hana / AP file

பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதியில் நான்கு பேர் ஒன்று கூடினாலே, உடனே கண்காணித்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று துப்பறியத் தொடங்கிவிடும் இஸ்‌ரேல் ராணுவமும் போலீஸும்! அவர்கள் இந்த அமைப்பை ஒரு சேவை நிறுவனமாகவே ஆரம்பத்தில் பார்த்தார்கள். இந்த அமைப்பு பாலஸ்தீனர்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவது நல்லது என்றும் கருதினார்கள். அந்த நாட்களில் யாசர் அராபத் உருவாக்கிய பாலஸ்தீன விடுதலை இயக்கமும், அதன் அரசியல் பிரிவான ஃபதா கட்சியும் உச்சப்புகழில் இருந்தது. மதச்சார்பற்ற அமைப்பாக இரண்டையும் அராபத் நடத்திவருவது தீவிர மதநம்பிக்கையாளர்களான பாலஸ்தீனர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் ஷேக் அகமது யாசினை நாடி வந்தனர். ‘அராபத்துக்கு எதிராக இந்த அமைப்பு வலுவடைந்தால் நல்லது, அதனால் பாலஸ்தீனர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படும்’ என்று ஆசைப்பட்டது இஸ்ரேல். ஆனால், அது விபரீதமான ஓர் அமைப்பின் வளர்ச்சி என்பதை அப்போது இஸ்ரேல் உணரவில்லை.

 

1987 டிசம்பரில் காஸா சோதனைச்சாவடியில் ஒரு கார்மீது இஸ்ரேல் ராணுவத்தின் டிரக் மோதி நான்கு பாலஸ்தீனர்களைக் கொன்றது. இதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். அந்த நேரத்தில் ஷேக் அகமது யாசின் வீட்டில் கூடிய சில இளைஞர்கள், ‘‘இன்னமும் நாம் சேவை அமைப்பாகவே இருப்பது சரியில்லை. பாலஸ்தீன விடுதலைக்கான அரசியல் போராட்டத்தில் இறங்க வேண்டும்’’ என்று பேசினார்கள். ஒரு பக்கம் பாலஸ்தீன விடுதலை இயக்கம் வேரூன்றி இருக்க, இன்னொரு பக்கம் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் மக்களிடம் செல்வாக்கு பெறுவதை உணர்ந்த யாசின் இதற்கு சம்மதம் சொன்னார்.

1987 டிசம்பர் 10-ம் தேதி ஹமாஸ் உருவானது. என்றாலும், அதற்கு ஹமாஸ் என்று பெயர் வைக்கப்பட்டது 1988 ஜனவரியில்தான்! Ḥarakat al-Muqāwamah al-ʾIslāmiyyah என்பதன் சுருக்கமே ஹமாஸ். அதுவரை பாலஸ்தீன மக்களின் ஒற்றை அரசியல் குரலாக அராபத்தின் ஃபதா கட்சி இருந்தது. அது மதச்சார்பற்ற அமைப்பு. ஆனால், ஹமாஸ் ‘இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்’ என்றே அடையாளப்படுத்தப்பட்டது. ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தை விடுவிப்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் மதக்கடமை. பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய அரசை நிறுவுவோம்’ என்று ஹமாஸ் பிரகடனம் வெளியிட்டது.

பாலஸ்தீன ராணுவம்

பாலஸ்தீன ராணுவம்

ஹமாஸின் செயல்பாடுகளில் யாசின் நேரடியாக ஈடுபடவில்லை. ஆசீர்வாதம் வழங்கும் ஒரு ராஜகுருவின் நிலையில் இருக்க விரும்பினார். அவர் தனது பழைய அமைப்பின் சேவைகளைச் செய்வதற்கு ஹமாஸின் அரசியல் தடையாக இருக்கக்கூடாது என்று நினைத்தார். ஆனால், al-Mujama al-Islamiya என்ற சேவை அமைப்பின் நீட்சியாகவே ஹமாஸ் உருவெடுத்தது.

பாலஸ்தீன மாணவர் அமைப்புகளில் செயல்பட்டவர்களை வைத்து ஒரு போராளிக்குழுவை ஹமாஸின் துணை அமைப்பாக ஆரம்பித்தார் யாசின். இன்னொரு பக்க உளவுப்படை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்துக்கு பாலஸ்தீனத்திலிருந்து உளவு சொல்பவர்களைக் கண்டுபிடித்து அழிக்கும் பணி இதற்குத் தரப்பட்டது. ஆனால், இந்த அமைப்புகள் உருவானது தெரிந்ததுமே இஸ்ரேல் ராணுவம் களத்தில் இறங்கி இவர்களைப் பிடித்தது, ஆயுதங்களையும் பறிமுதல் செய்தது.

இதைத் தொடர்ந்து யூனிட் 101 என்ற துணை அமைப்பை ஹமாஸ் உருவாக்கியது. இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் கடத்திவந்து கொல்வது இவர்களின் பணி. 1989-ம் ஆண்டு முதன்முதலாக இரண்டு இஸ்ரேல் வீரர்களை யூனிட் 101 அமைப்பினர் கடத்திவந்து கொன்றனர்.

இஸ்‌ரேல் கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்தது. யாசின் உட்பட ஹமாஸ் அமைப்பில் இருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக விசாரணை நடத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இயக்கமாக ஹமாஸ் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் கிட்டத்தட்ட செயலிழந்தது.

அதற்கு மீண்டும் உயிர் கொடுத்தது இஸ்ரேல் அரசுதான். ஜெருசலேம் நகரில் இருக்கும் அல்-அக்ஸா மசூதி, இஸ்லாமியர்களுக்கு மெக்கா மற்றும் மதீனாவை அடுத்து மூன்றாவது புனிதமான வழிபாட்டுத் தலம். இந்த மசூதியை ஒட்டியே யூதர்களின் பழைமையான வழிபாட்டுத் தலமான கோயில் மலையும் இருக்கிறது. இங்கு யூத அடிப்படைவாத அமைப்பினர் சிலர் மூன்றாவது கோயிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட முயன்றனர். 1990 அக்டோபரில் இதையொட்டி நடைபெற்ற மோதலில், அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் 17 பேரை இஸ்ரேல் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மத்தியில் எழுந்த கோபம், ஹமாஸ் அமைப்புக்கு உயிர் கொடுத்தது.

Sheikh Izz ad-Din al-Qassam

Sheikh Izz ad-Din al-Qassam

சிறையில் அடைக்கப்பட்ட ஹமாஸ் தலைவர்களைத் தவிர, வெளியில் இருந்த எல்லோரும் இந்தத் தாக்குதலுக்கு எதிரான போராட்டக் களத்தில் ஒருங்கிணைந்தனர். புதிதாகவும் நிறைய பேர் வந்து சேர்ந்தனர். ‘ஒவ்வொரு இஸ்ரேல் ராணுவ வீரரும், ஒவ்வொரு இஸ்ரேல் போலீஸும் எங்கள் இலக்கு. அத்தனை யூத எதிரிகளையும் அழிக்க எல்லாவகை தாக்குதல்களையும் நடத்துவோம்’ என்று அறிவித்தது ஹமாஸ்.

இதைத் தொடர்ந்து ஹமாஸின் ராணுவப் பிரிவாக காஸிம் பிரிகேட்ஸ் (Qassam Brigades) என்ற தாக்குதல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. பாலஸ்தீன வரலாற்றில் Sheikh Izz ad-Din al-Qassam முக்கியமானவர். பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர். அவர் நினைவாகவே காஸிம் பிரிகேட்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. யாஹ்யா ஆயாஷ் (Yahya Ayyash) என்பவர் இதற்குத் தலைமையேற்றார். இதில் சேர்ந்த எல்லோருமே ‘ஆயாஷின் மாணவன்’ என்று தங்களை அடையாளப்படுத்தும் அளவுக்கு பாலஸ்தீனத்தில் ஆயாஷ் அப்போது பாப்புலர்.

 

‘இன்ஜினியர்’ என்று அவரை அச்சத்துடன் அழைத்தது இஸ்‌ரேல் ராணுவம். பாலஸ்தீனத்தில் இருக்கும் பிர்ஸெய்த் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்தவர். அதைவிட முக்கியமாக வெடிகுண்டு செய்வதில் கைதேர்ந்தவர். அதற்குமுன்பு வரை இஸ்ரேல் ராணுவமோ, போலீஸோ தாக்கினால் பாலஸ்தீன இளைஞர்கள் கற்களை வீசி பதிலடி கொடுப்பார்கள், உண்டிவில்லில் கல்லை வைத்து தாக்குவார்கள்.

“துப்பாக்கி வைத்திருக்கும் எதிரியுடன் கல்லை வீசி மோதுவது அபத்தமானது. நம்மை ஆக்கிரமித்திருக்கும் எதிரிகளுக்கு வலியைக் கொடுக்க வேண்டுமென்றால், உயிரிழப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குத் தாக்க வேண்டும்.” என்று ஆயாஷ் வலியுறுத்தினார்.

யாஹ்யா ஆயாஷ் (Yahya Ayyash)

யாஹ்யா ஆயாஷ் (Yahya Ayyash)

தற்கொலைப்படைத் தாக்குதலை அவர்தான் ஆரம்பித்து வைத்தார். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு இஸ்ரேல் ராணுவ முகாம்களுக்குப் போய் அவற்றை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினார்கள். இன்னொரு பக்கம் கார்களில் குண்டுகளைப் பொருத்தி, ராணுவ சோதனைச் சாவடிகள் அருகே கொண்டுசென்று வெடிக்கச் செய்தார்கள். ஆயாஷை 1996-ம் ஆண்டு இஸ்ரேல் உளவுத்துறை ரகசியத் தாக்குதல் நடத்திக் கொல்லும்வரை ஹமாஸின் பெரும்பாலான வெடிகுண்டுகளை அவரே செய்துவந்தார்.

1992 டிசம்பரில் எல்லைக்காவல் பணி செய்துவந்த இஸ்ரேல் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளைச் சேர்ந்த 415 பேரை லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்கு நாடு கடத்தியது இஸ்ரேல். அப்போது லெபனான் மீது தாக்குதல் நடத்தி அந்தப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்தது இஸ்ரேல். அதனால் நாடு கடத்துவது எளிதாக இருந்தது. ஆனால், இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அப்போது இஸ்‌ரேல் உணரவில்லை.

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினர் ஏற்கெனவே இருந்தனர். அவர்கள் இஸ்‌ரேலுடன் மோதி வந்தனர். அந்த அமைப்பினருக்கும், நாடு கடத்தப்பட்டு அங்கு போன ஹமாஸ் அமைப்பினருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கார் குண்டுகளை உருவாக்கி வைப்பதிலிருந்து ஆயுதப் பயிற்சி வரை ஹிஸ்புல்லா தீவிரவாதிகளிடம் ஹமாஸ் அமைப்பினர் கற்றுக்கொண்டனர். இன்னொரு பக்கம், அங்கிருக்கும் பாலஸ்தீன அகதி முகாம்களுக்குப் போய், தங்கள் அமைப்பில் கணிசமான இளைஞர்களை சேர்த்தனர்.

காஸாவில் கொண்டாடப்பட்ட ஹமாஸின் 25வது ஆண்டு | 25th anniversary of Hamas celebrated in Gaza

காஸாவில் கொண்டாடப்பட்ட ஹமாஸின் 25வது ஆண்டு | 25th anniversary of Hamas celebrated in Gaza

ஹமாஸ் அமைப்பினரை நாடு கடத்தி, காஸா பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமல் செய்ததால், சர்வதேச நாடுகளின் கண்டனத்துக்கு ஆளானது இஸ்ரேல். ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு, இஸ்ரேலின் செயலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு கடத்தியவர்களை ஒன்பது மாதங்கள் கழித்து திரும்பவும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு வர அனுமதித்தது இஸ்ரேல் அரசு. முன்பைவிட பயங்கரமானவர்களாக அவர்கள் திரும்பி வந்தனர். இஸ்ரேல் அதன் விளைவுகளை மோசமாக சந்தித்தது.

தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் சிறிய அமைப்பாக இருந்த ஹமாஸ் , பாலஸ்தீனத்தையே தன் அதிகாரத்துக்குள் கொண்டுவந்த பெரிய கட்சியாக ஹமாஸ் அதன்பின் மாறியது.

– தி.முருகன்

Leave A Reply

Your email address will not be published.