‘இம்முறை’.. இந்திய அணி உ.கோ. ஜெயிக்காதுனு நினைக்கிறேன்: காரணத்தை விளக்கிய வீரர்?

உலகக் கோப்பை 2023 தொடரில், வீழ்த்தவே முடியாத அணியாக இந்திய அணி திகழ்கிறது. இதுவரை நடைபெற்ற 7 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது. கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடும். இதன்மூலம், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து, அரையிறுதிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

இந்திய அணிக்கு எப்போதுமே காயம்தான் வில்லனாக இருக்கிறது. பும்ரா, ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டதால், கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பை இழந்தது. இந்நிலையில், தற்போதும் அதேபோல் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆம், வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது ஹார்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் தொடரில் இருந்தே விலகிவிட்டார். இது இந்திய அணிக்கு நிச்சயம் பெரும் பின்னடைவுதான்.

ஹார்திக் பாண்டியா விலகியதைத் தொடர்ந்து, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா என்ற சந்தேகத்துடன் எதிர்மறை கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக ஆரம்பித்துவிட்டது. காரணம், ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்றான வீரர் உலகிலேயே கிடையாது என்ற நிலைமைதான் இருக்கிறது. ஆம், ஹார்திக் இல்லாததால், இந்திய அணியில் 6 விக்கெட்டிற்கு பிறகு பேட்டர்களே இல்லாத நிலைமை இருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டிக்கு வர்ணனையாளராக இருந்த தமிழக வீரர் ஹேமங் பதானி, ஹார்திக் பாண்டியா இல்லாதது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், ”கிரிக்கெட்டில் ஒரு லாஜிக் இருக்கிறது. லீக் சுற்றில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வெற்றிகளை பெறும் அணி, நாக்அவுட் சுற்றில் உடனே தோற்று வெளியேறுவதை பார்த்திருக்கிறோம்”

”2015ஆம் ஆண்டில்கூட, லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறினோம். இம்முறையும் நமக்கு அப்படிதான் நடக்கும் எனத் தோன்றுகிறது” என கவலையுடன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.