சனாதன விவகாரம்..உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்!! உயர் நீதிமன்றம் அதிரடி

சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த நீதிபதி, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையின் தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது எனவும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என தெரிவித்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.