திருமலையில் அடாத்தாக வந்து குந்திய புத்தர்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப் பகுதியில் இன்று காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் அந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரால் குறித்த கட்டுமானங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், தடை உத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் 09.09.2023 அன்று அந்தப் பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இன்று காலை அந்தப் பகுதியில் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர் எனவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச் சூழ சிங்கள மக்களைக் குடியேற்றும் திட்டம் உள்ளது எனவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.