சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் குழு இலங்கை வருகை!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) மாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தத் தூதுக் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட அரசின் உயர்மட்டத்தினரைச் சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, கொழும்புத் துறைமுக நகர் திட்டம், அம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல்வேறு சீன முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் அரச தரப்பினருடன் அவர்கள் கலந்துரையாடவுள்ளனர். கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முகமது முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது. இதில் பங்கேற்கும் வகையில் முதலில் மாலைதீவுக்கான விஜயத்தை சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஷென் ஹிகின் முடித்துக்கொண்டு இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.